திருமந்திரம் – பாடல் 1769: ஏழாம் தந்திரம் – 6. ஞான லிங்கம்

by Lifestyle Editor

ஞான லிங்கம் (உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றுமாக இருக்கின்ற சதாசிவத்தை ஞான இலிங்கமாக உணர்வது)

கொழுந்தினைக் காணிற் குவலையந் தோன்று
மெழுந்தடங் காணி லிருக்கலு மாகும்
பரந்தடங் காணிற் பராபதி மேலே
திரண்டெழக் கண்டவர் சிந்தையு ளானே.

விளக்கம்:

தமக்குள்ளிருந்து ஞானமாக வெளிப்படுகின்ற இறைவனின் ஆரம்ப நிலையை தரிசிக்கும் சாதகர்களுக்கு உலகங்கள் அனைத்திலும் சூட்சுமமாக அவன் கலந்து இருப்பது தெரியும். அவன் தமக்குள்ளிருந்து எழுந்து வந்த சுவடை கண்டு உணர்ந்தால் அதன் மூலம் அவனை அடைந்து எப்போதும் அவனோடு சேர்ந்தே இருப்பதும் முடியும். தமக்குள்ளிருந்து தோன்றிய இறைவனே அனைத்து உலகங்களுக்கும் பரவி இருக்கின்ற சுவடை கண்டு உணர்ந்தால் பராசக்தியின் தலைவனாக அனைத்திற்கும் மேலே அவன் வீற்றிருப்பதை உணரலாம். அப்படி அனைத்திலும் கலந்து நிற்கின்ற இறைவன் ஒன்றாக திரண்டு எழுந்து நிற்பதை கண்டு உணர்ந்த சாதகர்களின் அறிவுக்கு உள்ளே அவன் எப்போதும் ஞான இலிங்கமாக வீற்றிருப்பான்.

Related Posts

Leave a Comment