பாம்பு கடித்து 10-ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

by Column Editor

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தியா என்ற பத்தாம் வகுப்பு மாணவி பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மீனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகாந்த். இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் இவர்கள் அனைவரும் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களது மூத்த மகள் சந்தியா மீனம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒன்பது நாட்களுக்கு முன்பு மாணவி சந்தியா தனது பெற்றோருடன் அவர்களது குடிசை வீட்டில் உறங்கும்போது பாம்பு கடித்துள்ளது. இதனை அறியாத சந்தியா வீட்டிலே இருந்த நிலையில் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் அவரை அவரது பெற்றோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மருத்துவர்கள் சந்தியாவை பரிசோதனை செய்து பின்னர் பாம்பு கடித்துள்ளது என்பதை உறுதி செய்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கடந்த 9 தினங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த சந்தியா இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை மட்டுமின்றி அந்த கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் உயிரிழந்த மாணவி சந்தியாவின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு போதிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Related Posts

Leave a Comment