புஜாரா, சுப்மன் கில் சதம் விளாசல் – வங்கதேசத்திற்கு 513 ரன்கள் இலக்கு ..

by Lifestyle Editor

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 258 ரன்களில் டிக்ளேர் செய்த நிலையில், வங்கதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச நாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் வங்காளதேசம் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நேற்று முன் தினம் தொடங்கியது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பேட்டிங் செய்து விளையாடிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், பின்னர் சிறப்பாக விளையாடியது. இறுதியாக இந்திய அணி 404 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 86 ரன்களும் எடுத்தனர். இதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வின் 58 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து முதலாவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இன்று தொடர்ந்து மூன்றாவது நாளில் ஆடிய அந்த அணி, 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சதம் விளாசினர். சுப்மன் கில்லுக்கு இது முதல் சர்வதேச சதம் ஆகும். இதனிடையே இந்திய அணி 258 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக கேப்டன் கே.எல்.ராகுல் அறிவித்தார். இதனையடுத்து வங்கதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment