செட்டிநாடு இட்லி பொடி…..

by Column Editor

நீங்கள் இட்லி பொடி பிரியரா? இட்லி, தோசைக்கு இட்லி பொடி வைத்து சாப்பிட விரும்புபவரா? அதே வேளையில் உங்களுக்கு செட்டிநாடு ரெசிபிக்கள் பிடிக்குமா? அப்படியானால் செட்டிநாடு ஸ்டைல் இட்லி பொடியை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுங்கள். இந்த செட்டிநாடு இட்லி பொடி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். உங்கள் வீட்டில் மதிய வேளையில் சாதத்திற்கு என்ன ஊற்றி சாப்பிடுவது என்ற யோசனை இருப்பின், செட்டிநாடு இட்லி பொடி இருந்தால், அதை சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடலாம்.

உங்களுக்கு செட்டிநாடு இட்லி பொடி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு இட்லி பொடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

* உளுத்தம் பருப்பு – 1/2 கப்

* கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்

* வரமிளகாய் – 10

* எள்ளு விதைகள் – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, எள்ளு விதைகள், கறிவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியாக வாணலியில் போட்டு வறுத்து குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சிறிது பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால், செட்டிநாடு இட்லி பொடி தயார். இந்த இட்லி பொடியை நல்லெண்ணெயுடன் தேவையான போது சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

குறிப்பு:

* உங்களுக்கு இட்லி பொடி காரமாக வேண்டுமானால், வரமிளகாயை இன்னும் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.

* உங்களுக்கு கடலை பருப்பு சேர்க்க விருப்பமில்லாவிட்டால், அதை தவிர்த்துக் கொள்ளலாம்.

* பெருங்காயத் தூள் மற்றும் எள்ளு விதைகள் இரண்டையும் எப்போதும் நல்ல தரமானதாகவே பயன்படுத்த வேண்டும். அது தான் நல்ல ப்ளேவரையும், மணத்தையும் தரும்.

Related Posts

Leave a Comment