மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட இதுக்கீடு : உச்ச நீதிமன்றம் அனுமதி…

by Column Editor

சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்பில் அரௌ மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தமிழக அரசுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது.

சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழக அரசின் இந்த ஆணையை ஏற்ற உயர்நீதிமன்றம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி அரசு மருத்துவர்களுக்கு 50% இடங்களை ஒதுக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநில அரசு பிறப்பித்த அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடு அரசாணைக்கு எந்த தடையும் கிடையாது என கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி தீர்ப்பளித்தது.

இதையடுத்து மீண்டும் நடப்பாண்டு ( 2022ம் ஆண்டு) மருத்துவ கலந்தாய்வின் போது தமிழக அரசு அறிவித்த 50 சதவீத இடஒதுக்கீட்டை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு தடை விதிக்க மறுத்ததோடு, இந்த ஆண்டே 50 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அதுதொடர்பான வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்த என்.கார்த்திகேயன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வு விசாரித்து வருகிறது.

முன்னதாக அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை இன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் அந்த வழக்கிற்கு இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில், சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கியதோடு, தமிழகத்தில் அரசின் அரசாணையை இடைக்காலமாக செயல்படுத்தவும் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

மேலும் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மருத்துவ உயர்படிப்புகளில் கலந்தாய்வு நடத்தி மாணவர்களை நிரப்பிக் கொள்ளவும் நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. அத்துடன் தமிழக அரசின் அரசாணைக்கு எதிரான அனைத்து ரிட் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், 50% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பிரதான வழக்கு விடுமுறைக்குப் பிறகு விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Related Posts

Leave a Comment