மனைவி மீது சந்தேகம்- குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தந்தைக்கு ஆயுள்

by Lifestyle Editor

மனைவி மீது உள்ள சந்தேகத்தால் இரண்டு குழந்தைகளையும் மாட்டுக்கு புல் அறுக்க வேண்டும் என்று சொல்லி தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அங்கே கிணற்றில் தள்ளி கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம்.

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் அடுத்த புலியங்குறிச்சியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அமுதா இத்தம்பதிக்கு காவியா என்கிற மகளும், சந்தோஷ் என்ற மகனும் இருந்தனர் . அரசு பள்ளியில் சந்தோஷ் ஆறாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார் . தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார் காவ்யா.

சரவணன் -அமுதா இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருக்கிறது . அமுதாவின் மீதுள்ள சந்தேகத்தால் இந்த தகராறு அடிக்கடி நடந்து வந்திருக்கிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரவணன் மாட்டுக்கு புல் அறுக்க வேண்டும் என்று சொல்லி மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்று இருக்கிறார்.

தோட்டத்திற்குச் சென்றதும் மகனையும் மகளையும் கிணற்றில் வீசி கொலை செய்திருக்கிறார். பின்னர் வீடு திரும்பிய அவர் மகனையும் மகளையும் காணவில்லை என்று சொல்லி நாடகமாடியிருக்கிறார்.

வீரகனூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தேடி வந்ததில் கிணற்றில் குழந்தைகள் சடலமாக கிடந்தது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து நடந்த விசாரணையில் சரவணன் தான் கொலையாளி என்பதை தெரிந்ததும், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 2008ஆம் ஆண்டில் நடந்த இந்த சம்பவத்தின் வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்ததையடுத்து இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 2 குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்ற சரவணனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி ஜெயந்தி.

Related Posts

Leave a Comment