காலிஃப்ளவர் பெப்பர் ஃப்ரை

by Column Editor

அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ள காலிஃப்ளவர் உடலுக்கு பல்வேறு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கிறது. சுவையான காய்கறி வகைகளில் ஒன்றாக இருக்கும் இந்த காலிஃப்ளவர் வைட்டமின் கே மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை அதிக அளவில் கொண்டுள்ளதால் உடலில் இருக்கும் அழற்சியை துரத்தி அடிக்கிறது. காலிஃப்ளவர் ஐந்து நிமிடத்திற்கு மேல் வேக கூடாது. அப்போது தான் அதிலிருக்கும் முழுமையான சத்துக்கள் நமக்கு கிடைக்கும். ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த ‘காலிஃப்ளவர் பெப்பர் ஃப்ரை’ சுவையாக எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

காலிஃப்ளவர் பெப்பர் ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள்:

காலிஃபிளவர் – ஒரு முழு பூ, மிளகு – ஒன்றரை டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், வர மிளகாய் – ஒன்று, பட்டை – 1, கிராம்பு – 3, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, எண்ணெய் – தேவையான அளவு, பெரிய வெங்காயம் – ஒன்று, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

காலிஃப்ளவர் பெப்பர் ஃப்ரை செய்முறை விளக்கம்:

முதலில் முழு காலிஃப்ளவர் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் இலைகளை நீக்கி தனித்தனி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். பிறகு அடுப்பை அணைத்து அந்த தண்ணீரில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் அரை டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதில் நீங்கள் நறுக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளை சேர்க்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் அப்படியே விட்டுவிட்டால் காலிபிளவரில் இருக்கும் சிறுசிறு புழுக்கள், கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் அனைத்தும் தண்ணீரில் கீழே இறங்கி விடும். அதன் பிறகு மேலே இருக்கும் காலிஃப்ளவரை மட்டும் தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வையுங்கள். அதில் மிளகு, சோம்பு மற்றும் சீரகம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு துண்டு பட்டை, மூன்று கிராம்பு, ஒரு நீண்ட வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வாசம் வர லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்த இந்த பொருட்களை எல்லாம் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுது மற்றும் கருவேப்பிலை கொத்தை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பொடிப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வர நன்கு வதங்கியதும், ஆற வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து லேசாக வதக்கி அடுப்பை மூடி வைத்துக் கொள்ளுங்கள்.

5 நிமிடம் கழித்த பின்னர் மூடியை திறந்து பார்த்தால் காலிஃப்ளவர் வெந்து இருக்கும். அதனுடன் நீங்கள் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து வதக்க வேண்டும். மசாலா எல்லா இடங்களிலும் நன்கு கலந்து வர வதக்கி விட்ட பின்பு அடுப்பை அணைத்து நறுக்கிய மல்லித்தழை தூவி சுடச்சுட சாதத்துடன் பரிமாற வேண்டியது தான். ரொம்பவே அற்புதமான சுவையை கொடுக்கக்கூடிய இந்த காலிஃப்ளவர் பெப்பர் ஃப்ரை சுலபமாக நீங்களும் இதே முறையில் ஒருமுறை செய்து பார்த்து அசத்துங்கள்.

Related Posts

Leave a Comment