பொங்கல் பண்டிகை : அரசுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

by Column Editor

பொங்கல் பண்டிகையையொட்டி, அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் பயணிகள், இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

பொங்கல், தீபாவளி மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வர். அவ்வாறு செல்பவர்கள் பெரும்பாலானோர் பேருந்து போக்குவரத்தையே பயன்படுத்துவர். அந்த நாட்களில் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும் என்பதால், அதனைத் தவிர்க்க பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இருப்பினும் கடைசி நேரத்தில் பேருந்தில் இடம் கிடைக்காத நிலை ஏற்படும். இதுபோன்ற இன்னல்களை தவிர்க்க பெரும்பாலானோர் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்வர்.

அந்தவகையில் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். இந்த நாட்களில் வெளியூர்களில் வசிப்பவர்கள், குடும்பத்துடன் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வர். அவ்வாறு பொங்கல் பண்டிகைக்கு பேருந்தில் செல்ல விரும்புபவர்கள், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. முக்கிய ஊர்கள் மற்றும் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்கு செல்பவர்கள் மட்டும் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்துகொள்ளலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். www.tnstc.in என்ற இணையதளம் மூலமாக முன்பதிவுகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் பெங்களூரு மற்றும் திருப்பதிக்கு செல்லவும் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு தொடர்பான விவரங்களுக்கு 044 49076316 என்ற எண்ணில் தொலைபேசி வாயிலாகவும் தொடர்புகொண்டு கேட்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment