கல்லறையில் மயங்கி கிடந்த நபர் – தோளில் தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்த காவல் ஆய்வாளர்

by Column Editor

சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை ஒன்றின் மீது மயங்கி விழுந்துக்கிடந்த நபரை, காவல் ஆய்வாளர் தோளில் தூக்கிச் சென்று மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, சென்னையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை தொடங்கிய கனமழை தற்போது வரை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. கனமழை காரணமாக வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தெருவோரங்களில் வசிப்போருக்கு இம்மழை கடும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த மக்கள் கிடைக்கும் இடங்களில் படுத்துறங்கி தங்களின் வாழ்வை நகர்த்துகிறார்கள். அந்த வகையில் சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வரும் உதயா என்பவர் கனமழை காரணமாக கல்லறைக்குள்ளேயே தங்கி இருந்து வந்தார். கனமழை தொடர்ந்த காரணத்தால் உதயா உடல் நிலை பாதிக்கப்பட்டு அங்கேயே மயக்கி இருக்கிறார்.
அவரை கண்ட அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அங்கு சென்றார். முறிந்து விழுந்த மரங்களை அகற்றி உதயாவை தனது தோளில் வைத்து ஆட்டோவில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். காவல் ஆய்வாளர் அவரை தூக்கி செல்லும் காட்சி, பார்ப்போரை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Posts

Leave a Comment