ஹைகோர்ட் முக்கிய உத்தரவு – தியேட்டரில் 100% இருக்கை அனுமதி

by Column Editor

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நவம்பர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100% இருக்கையைப் பயன்படுத்த அனுமதியளித்து கடந்த அக்டோபர் 23ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உடன்குடியைச் சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதியளித்தால் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும், ரசிகர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற மாட்டார்கள் எனவும் மனுதாரர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நிபுணர்களின் ஆலோசனைப்படி, அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பிறகே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், மீன் சந்தைகளில் இருப்பதைப் போல திரையரங்குகள் இருக்காது எனவும் அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், தனி மனித விலகலை பின்பற்ற வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என அரசு வழிகாட்டு விதிகளை அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தனர். பண்டிகை காலங்களில் கொரோனா தாக்கம் அபாய அளவை தாண்டி விடவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், எந்த ஆதாரங்களும் இல்லாமல் இதுபோல வழக்குகளை தொடர்ந்து நீதிமன்றத்துக்கு தர்மசங்கடம் ஏற்படுத்த கூடாது எனவும் மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.

Related Posts

Leave a Comment