சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

by Column Editor

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நீண்ட நாட்கள் பள்ளிகள் திறக்கப்படாததால், வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2021-22-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் குறிப்பிட்ட நாளில் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை குறைந்த நிலையில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன.

அதன்பின் கடந்த 1-ந்தேதியில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. பருவமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாட இருப்பதால் வெளிக்கிழமையும் விடுமுறை விடப்பட்டது. ஆனால், சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.

இதனால் சனிக்கிழமை பள்ளிக்கூடத்திற்கு மாணவ- மாணவிகள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்றைய தினம் விடுமுறை விடப்பட்டால் தொடர்ந்து நான்கு நாட்கள் சொந்த ஊரில் தீபாவளி விடுமுறையை சந்தோசமாக கொண்டாட வாய்ப்பு ஏற்படும். இல்லையெனில் சனிக்கிழமை பள்ளிக்கு வந்தபின், ஞாயிற்றுக்கிழமை வீட்டில்தான் இருக்க வேண்டும். இடையில் ஒரு நாளுக்காக பெற்றோர்கள் சொந்த ஊரில் இருந்து திரும்ப வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

இதனால் சனிக்கிழமை விடுமுறை அளிக்குமாறு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்று சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் அடுத்த திங்கட்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.

Related Posts

Leave a Comment