நெமிலி ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி பாடல்

by Web Team

காஞ்சிக்கு காமாட்சி, மதுரைக்கு மீனாட்சி, காசிக்கு விசாலாட்சி, அதே போன்று நெமிலிக்கு பாலா! ஆம், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே நெமிலி என்ற அழகான ஊரிலே கடந்த 150 ஆண்டுகளாக அருள் மழை பொழிந்து வருகிறாள் அன்னை பாலா! அன்னை பாலா நெமிலிக்கு வந்த வரலாறு சுவாரஸ்யமானது. சிவம் பெருக்கும் சிலர் நெமிலி டி.கே.சுப்பிரமணிய ஐயர் கனவிலே பத்து வயதுப் பெண் ஒருவள் பச்சைப் பாவாடை உடுத்திக் கொண்டு நான் தான் பாலா! உன் வீட்டுக்கு விக்கிரமாக வருவேன்.

உன் இல்லத்துக்கு அருகே உள்ள குஸஸ்தலை ஆற்றில் என்னைத்தேடுக! என்று அருள்வாக்கு தந்தாள் இரண்டு நாள் ஆற்றிலே தேடிய போது கிடைக்காமல் அடம்பிடித்த பாலா மூன்றாவது நாள் தேடிய போதுதான் தனது விளையாட்டை நிறுத்திக்கொண்டு விக்கிரமாக சுண்டு விரல் உயரத்திலே அந்த சுந்தரி அவருக்குக் கிடைத்தாள். கடந்த நான்கு தலைமுறைகளாக ஐயரவர்கள் வீட்டுக் கூடத்தையே தனது மண்டபமாக்கி அருளாட்சி புரிந்து வருகிறாள்.

திருமணம் – திருமகவு – திருமணை – திருக்கல்லி என வந்தவருக் கெல்லாம் அருளை வாரி வழங்கி வருகிறாள். தற்போது பீடத்தை நான்காவது தலைமுறையை சார்ந்த ஸ்ரீபாலா பீடாதிபதி, கவிஞர் நெமிலி எழில்மணி மற்றும் அவரது பிள்ளைகள் பாபாஜி. மோகன்ஜி பராமரித்து வருகின்றனர். கவிஞர் நெமிலி எழில்மணி அவர்கள் தமிழக அரசால் கலைமுதுமணி என்ற விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டவர்.

ஸ்ரீபாலாவின் மூல மந்திரம்

ஐம் – க்லீம் – செள்

ஸ்ரீ பாலாவின் தியான ஸ்லோகம்

அருண கிரண ஜாலா- ரஞ்சிதா சாவகாசா

வித்ருத் ஜப படீகர் – புஸ்தகா பீதி ஹஸ்தா

இதர கர வராட்யா – புஹ்ல கஹலார சமஸ்தர்

நிவசது ஹ்ருதி பாலா – நித்ய கல்யாண சீலா

நெமிலி பாலாவின் – உற்சவ விக்கிரகம் கொள்ளை அழகு – கைகளில் ஜப மாலையும், புத்தகமும் ஏந்திக்கொண்டு அபய வரத முத்திரைகளைக் காட்டி கொண்டிருக்கும் ஸ்ரீபாலாவே சகல வித்யை கட்டும் பிறப்பிடம்.

நெமிலி பாலா. அந்த இசையினில் வசிப்பவள் பாலா. கடந்த பல வருடங்களாக முதல் நாள் இன்னிசை வழங்கி வந்த டாக்டர் சீர்காழி கோவிந்த ராஜனை தொடர்ந்து அவரது மகன் டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம் முதல் நாள் நவராத்திரி இசை வழங்கி வருகிறார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து இசை வழங்கி சேவை செய்து வந்தார். பின்னணிப் பாடகிகள் பி.சுசிலா, வாணி ஜெயராம், சித்ரா, எஸ்.ஜானகி, நித்யஸ்ரீ மகாதேவன், சுதா ஆகியோரும் பின்னணிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப் பிரமணியம், கே.வீரமணி, மலேசியா வாசுதேவன், பி.பீ.ஸ்ரீனிவாஸ், மதுதேவா போன்ற பலரும் அன்னையிடம் பாடி அருளைப் பெற்றவர்கள்.

அன்னை பாலாவின் நவராத்திரியை தவிர ஆடி வெள்ளிப் பெருவிழா, சித்திரைத் திருவிழா, ஐப்பசி பூரத்தன்று பிறந்த நாள் விழா, புத்தாண்டு விழா என பாலாபீடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும்.

பாலா பீடம் ஒரு சித்தர் பீடம், ஆம் கருவூர் சித்தருக்கு காட்சி தந்த அருட்பீடம். கருவூர் சித்தரின் பூசை விதிமுறை கண்ணிகள், அதாவது செய்யுட்களில் முதல் செய்யுள் என்ன தெரியுமா?

ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே

ஆச்சரியம் மெத்தமெத்த அது தான் பாரு

சோதியந்த நடுவீடு பீடமாகி

சொகுசு பெற வீற்றிருந்தாள் துரைப்பெண்ணாத்தாள்

வீதியது ஆறுதெரு அமர்ந்த வீதி

விளையாடி நின்றதிரு மாளி கண்டாய்

பாதி மதி சூடியே இருந்த சாமி

பத்து வயதாகுமிந்த வாமிதானே

ஓ! இது என்ன ஆச்சர்யம் நெமிலியிலே ஆற்றுக்குப் போகும் சத்திரத் தெருவிலே ஐயரவர்கள் நடுவீடான கூடத்திலே பாலாபீடம் அமைந்துள்ளதே! என்னே கருவூர் சித்தரின் தீர்க்க தரிசனம் என்று வாரியார் ஸ்வாமிகள் வியந்தார். பண்டபுத்ரவதம் செய்தவள் பாலா! பாலா லீலா வினோதனி என லலிதா சகஸ்ரநாமம் கூறுகிறது.

ஸ்ரீ பாலா பீடக்குறிப்புகள்

அரக்கோணம் தாலுகா, நெமிலியில் ஸ்ரீ பாலா பீடம் அமைந்துள்ளது. அரக்கோணத்திலி ருந்து 16 கி.மீ தொலைவிலும், சோளிங் கரிலிருந்து 30 கி.மீ தொலைவிலும், காஞ்சீபுரத்திலிருந்து 24 கி.மீ தொலைவிலும், காவேரிப் பாக்கத்திலிருந்து 20 கி.மீ தொலை விலும், நெமிலி உள்ளது. பிரதி மாதம் முதல் ஞாயிறு, புத்தாண்டு மற்றும் நவராத்திரி காலங்களில் சிறப்பு வழிபாடு உண்டு.

அன்னை பாலா

திருமணம் முடிக்கும் திரிபுர சுந்தரியாகவும்,

திருமகவு அளிக்கும் திரிபுர சுந்தரியாகவும்,

திருமனை வழங்கும் திரிபுர சுந்தரியாகவும்,

திருக்கல்வி தரும் திரிபுர சுந்தரியாகவும்

அருள் பாலிக்கிறாள்.

அருள் மிகும் தேவி அன்னை பாலா திரிபுரசுந்தரி சரணம்

இருள்தனை நீக்கும் தாயே பாலா திரிபுரசுந்தரி சரணம்.

பாலா பக்தர்களின் அன்புச் சிறையிலிருந்து நீங்கா வண்ணம், அனைவரும் அவளுக்குப் போட்ட பூட்டு பாட்டு. ஆம்! பாடல்கள்தான் அவளுக்குப் பிடித்த ஒன்று. அவளைப்பற்றி பாடப்பாட பாடல் பிறக்கும். நல்ல பாதை திறக்கும்.

அருள்மிகு தேவி அன்னை பாலா திரிபுரசுந்தரி சரணம்!

இருள்தனை நீக்கும் தாயே

பாலா திரிபுரசுந்தரி சரணம்!

இந்தப் பாடல் பாடாமல் எந்த பூஜையும் நிறைவு பெறாது. பூஜை என்ன, பாலா பீடத்து விழாக்கள் எதுவானாலும் இந்தப்பாடல் பாடாமல் விழா நிறைவுறாது. இந்தப்பாடல் பாலா பக்தர்களுக்குத் தெவிட்டாத தேசிய கீதம்.

எளிமையான வார்த்தைகள், பாடப்பாட சந்தோஷம் பிறக்கும் எளிமையானப் பாடல்.

எந்தப் பேனாவும் தானாக எழுதாது. வெளியே இருந்து ஒரு சக்தி இயக்க வேண்டும். அந்தப் பேனாவை பாலா இயக்குகிறாள் என்பதே நிதர்சனமான உண்மை.

பாலாவை மயக்கப் பாடல் ஒன்றுதான் சரியான வழி என்று பலரும் பரீட்சித்துப் பார்த்து கொண்டனர்.

அன்னை பாலாவை, அழகு கொஞ்சும் அன்பு பாலாவை தன் பாடல்கள் மூலம், தன்னுடைய எழுத்துக்கள் மூலம், வெளிஉலகிற்கு தெரியச் செய்த பெருமை கவிஞர் நெமிலி எழில்மணியைச் சாரும்.

மெலிந்த எளிமையான தோற்றம், இயல்பான பேச்சு, சிரித்த முகம் மற்றும் சாதாரண வேட்டி சட்டையுடன் பாலா பீடத்தை வலம் வரும் கவிஞர் நெமிலி எழில்மணி நம்மில் நடமாடும் ஒரு உன்னதமான சித்தர்போல உள்ளார்.

பாலா அவருக்களித்த உபதேசத்தை இதுவரை அவர் மறுத்ததில்லை. ஏன் எப்படி என்று காரணம் கேட்டதில்லை. அடுத்தவர்களுக்கு அதை நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை. பாலா சொல்வதைத் திருப்பிச்சொல்லும் ஒரு கிளிப் பிள்ளையாக அவர் உள்ளார். அவரை பாலா தனக்கு ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு பல உன்னதமான பாடல்களை எழுத வைத்துள்ளார். அவர் பாலா வித்யா மந்திரைத் துவக்க வைத்தது. பாலாவின் பவுர்ணமி பிரசாதங்களைப் பாலா விஜயம் எனும் பெயரில் எல்லோருக்கும் அனுப்பி வைத்தது. தெய்வ வழிப்பாட்டை மனிதநேய வழிபாடாக மாற்றியவர்.

பாலா பீடத்தின் அதிபதியாக தனி ஆசனம் தந்தும், தன்னிகரில்லாப் பதவி தந்தும், இன்றளவும் மிகமிக எளிமையாக கர்வம் தரிக்காமல் சாதாரண உடை அணிந்து வருபவர்கள் எல்லாம் பாமரத் தமிழில் பாலாவின் பெருமைகளை எடுத்துச்சொல்லி பாலா பீடத்தில் தினந்தோறும் சேவை செய்துவருகிறார். ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்கள் பயன்பெற தெலுங்கிலும் பேசி விளக்குகிறார். பாலாவை தரிசிக்க வருபவரை உபசரிக்கும் உயர்ந்த பண்புகளை பாலா அவருக்கு உபரியாக கொடுத் திருக்கிறாள். மிகமிக விசேஷமான மனிதர்கள் மிகமிக எளிமையோடு காட்சி தருவார்கள். அவர்கள்தான் உண்மையான ஞானிகள்.

எழில்மணி அவர்கள் எழுதிய பாலா சுப்ரபாதம், கவசம் மற்றும் அருள்மிகு தேவி பாடல்களைப் பாட முன்னேற்றம் வரும்.

கவிஞர் நெமிலிஎழில்மணி, நெமிலி ஸ்ரீ பாலா பீடாதிபதி

Related Posts

Leave a Comment