கொண்டைக்கடலை குருமா..

by Lifestyle Editor

மசாலா அரைக்க தேவையானவை :

சின்ன வெங்காயம் – 25

தக்காளி – 1

இஞ்சி – 1/2-இன்ச் துண்டு

நாட்டு பூண்டு – 10 பல்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் – 1/2 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

தண்ணீர் – தேவைக்கேற்ப

குருமா செய்ய தேவையானவை :

கருப்பு கொண்டைக்கடலை – 1 கப்

பெரிய வெங்காயம் – 1

துருவிய தேங்காய் – 1/3 கப்

முந்திரி – 20

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி தூள் – 2 டீஸ்பூன்

கரம் மசாலா – 1/2 டேபிள் ஸ்பூன்

கருப்பு மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

இலவங்கப்பட்டை – 1

கிராம்பு – 3

கறிவேப்பிலை – ஒரு கொத்து

கொத்தமல்லி இலை – சிறிதளவு

தண்ணீர் – தேவையானவை

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

இந்த குருமா செய்ய முதல் நாளே கருப்பு கொண்டைக்கடலையை நன்றாக அலசி இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

தற்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பெருஞ்சீரகம், நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.

பின்னர் அதில் சின்ன வெங்காயம் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.

தக்காளி மென்மையாக வதங்கும் வரை நன்கு வதக்கி அடுப்பை அணைத்து கொள்ளவும்.

வதக்கிய அனைத்தும் நன்றாக ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவான பேஸ்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பிறகு பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இலவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக சில நிமிடங்கள் வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா மற்றும் கருப்பு மிளகு தூள் சேர்த்து கலந்து வதக்கிக்கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

பிறகு அதில் ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையை சேர்த்து நன்கு கலந்துவிட்டு கொள்ளுங்கள்.

தற்போது குக்கரை மூடி 20 நிமிடங்களுக்கு விசில்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் குறைந்த தீயில் சமைக்கவும்.

இதற்கிடையே ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், முந்திரி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

குக்கரில் இருந்து பிரஷர் தானாக அடங்கியவுடன் மூடியை திறந்து அடுப்பை ஆன் செய்து சிம்மில் வைத்து கொள்ளுங்கள்.

தற்போது அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை குருமாவுடன் சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் சமைக்கவும்.

குருமா நன்கு கொதிவந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும்.

அவ்வளவுதான் சுவையான சத்துநிறைந்த கருப்பு கொண்டைக்கடலை குருமா தயார்…

Related Posts

Leave a Comment