பருப்பு உருண்டை குழம்பு…

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

பருப்பு உருண்டை செய்ய தேவையானவை :

கடலைப்பருப்பு – 1/2 கப்

துவரம் பருப்பு – 1/4 கப்

சின்ன வெங்காயம் – 50 கிராம்

வரமிளகாய் – 4

சோம்பு – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

கருவேப்பிலை – சிறிதளவு

உப்பு – சுவைக்கேற்ப

தேங்காய் விழுது அரைக்க தேவையானவை :

துருவிய தேங்காய் – 1/4 கப்

முந்திரிப் பருப்பு – 5

சீரகம் – 1/2 டீஸ்பூன்

குழம்பு செய்ய தேவையானவை :

சின்ன வெங்காயம் – 150 கிராம்

தக்காளி – 1

பூண்டு – 50 கிராம்

புளி – சிறிய எலுமிச்சை அளவு

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

குழம்பு மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

வெந்தயம் – 1/8 டீஸ்பூன்

நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்

கருவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் புளியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு ஊறவைத்து அதை கரைத்து வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பை நன்றாக இரண்டு மூன்று முறை அலசி ஒரு பத்திரத்த்தில் போட்டுக்கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் வரமிளகாய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுமார் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

இவை நன்றாக உறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் சோம்பு, சீரகம் மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.

தற்போது இட்லி தட்டில் எண்ணெய் தடவி பருப்பு உருண்டைகளை அதில் வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் இட்லி பானையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து அதில் பருப்பு உருண்டை உள்ள இட்லி தட்டை வைத்து 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள்.

கடுகு பொரிந்ததும் அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி கொள்ளவும்.

இவை பொன்னிறமாக வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி மென்மையாக வதங்கியவுடன் மஞ்சத்தூள், குழம்பு மிளகாய்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு கொள்ளுங்கள்.

மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் புளி கரைசலை ஊற்றி அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ளவும்.

குழம்பு நன்கு கொதித்ததும் வேகவைத்த பருப்பு உருண்டைகளை அதில் சேர்த்து மூடி வைத்து சமைக்கவும்.

இதற்கிடையே ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம் மற்றும் முந்திரிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

குழம்பு நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

தேங்காய் வாசனை போனவுடன் இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான பருப்பு உருண்டை குழம்பு சாப்பிட ரெடி…

Related Posts

Leave a Comment