துருவ நட்சத்திரத்தை போல் மீண்டும் மீண்டும் தள்ளிவைக்கப்படும் தங்கலான் – ஏப்ரல் ரிலீஸில் இப்படி ஒரு சிக்கலா?

by Lifestyle Editor

பா.இரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் சீயான் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.ஜி.எப்-ல் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.

தங்கலான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கும் தயாராகிவிட்டது. முதலில் இப்படத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். அந்த சமயத்தில் சலார், டங்கி படங்கள் வெளியானதால் ஜனவரிக்கு தங்கலான் படத்தை தள்ளிவைத்தனர். இதையடுத்து ஜனவரி 26-ந் தேதி இப்படத்தை திரைக்கு கொண்டுவர உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அன்றைய தினமும் படம் ரிலீஸ் ஆகவில்லை.

பின்னர் இறுதியாக ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையில் இப்படம் திரைக்கு வரும் என கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஏப்ரல் ரிலீசுக்கும் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாம். அதன்படி ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதால் அந்த சமயத்தில் படத்தை ரிலீஸ் செய்தால் வசூல் பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தங்கலான் படத்தின் ரிலீசை தள்ளிவைக்கும் முடிவுக்கு படக்குழு வந்துள்ளதாம்.

இதனால் ஏப்ரல் மாதமும் தங்கலான் படம் திரைக்கு வருவது சந்தேகம் தான் என கூறப்படுகிறது. ஏற்கனவே விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் இதுபோன்று அடிக்கடி தள்ளிவைக்கப்பட்டு வந்ததால் கடுப்பான ரசிகர்களை மேலும் டென்ஷன் ஆக்கும் விதமாக தங்கலான் படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் அமைந்துள்ளது. தேர்தல் முடிந்த பின் தங்கலான் திரைக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment