இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதே இலக்கு.. அமெரிக்காவுக்காக விளையாடப் போகும் உன்முக்த் சந்த்!

by Lifestyle Editor

2012 ஆம் ஆண்டு நடந்த இந்திய U19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தி இறுதிப் போட்டியில் சதம் அடித்து கோப்பையை வென்றவர் உன்முக் சந்த். அதன் பிறகு அவருக்கு நடந்ததெல்லாம் சோகம்தான். இந்திய அணியில் இடம் கிடைக்கும் என காத்திருந்தவருக்கு கிடைத்தது ஏமாற்றமே.

ஐபிஎல் தொடரிலும் பல அணிகள் அவரை ஏலத்தில் எடுத்தாலும் போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது தன்னுடைய 28 ஆவது வயதிலேயே சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வை அறிவித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாடி வந்தார். அவரின் இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போது சந்த் அமெரிக்க தேசிய அணிக்காக விளையாட உள்ளார். மார்ச் மாதம் அவர் அமெரிக்க அணியில் இணைய உள்ளார். இதையடுத்து அவர் ஜூன் மாதம் அமெரிக்காவில் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பையில் அமெரிக்காவுக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள சந்த் “நான் இந்திய அணிக்காக விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், என்னுடைய அடுத்த இலக்கே இந்திய அணிக்கெதிராக விளையாடுவதுதான். இதை நான் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை. நான் என்னை உலகின் சிறந்த அணிக்கெதிராக விளையாடி சோதிக்க விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment