திதி பார்த்து வழிபட்டால் விதி மாறும்

by Lifestyle Editor

ராமர் பிறந்தது நவமி திதி என்பதால் ராமநவமி என்று அழைக்கப்படுகின்றது. நாம் நமது பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவது போல இறைவன் பிறந்த நாளையும் மகிழ்ச்சியோடு கொண்டாடினால் இனிய வாழ்க்கை நமக்கு அமையும். பொதுவாக ஒரு காரியத்தை தொடங்கும் பொழுது இன்று அஷ்டமி, நவமியாக இருக்கின்றது.

வேறொரு நல்ல நாள் பார்த்து புது முயற்சி செய்யலாம் என்று மக்கள் அனைவரும் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இதையறிந்த அஷ்டமி, நவமி ஆகிய இரண்டு திதிகளும் மிகவும் கவலைப்பட்டு இறைவனிடம் முறையிட்டதாம். உடனே இறைவன் உங்கள் இருவரையும் கொண்டாடும் விதத்தில் ஒரு செயல் செய்கின்றேன் என்று சொல்லி அஷ்டமி திதியன்று கண்ணன் அவதாரம் எடுத்த நாளாக அமைத்தார். நவமி திதியன்று ராமர் அவதாரம் செய்த நாளாக அமைத்தார்.

இந்த இரண்டு திதிகளும் சந்தோஷப்பட்டன. நம்மை மக்கள் கொண்டாட இறைவன் அவதரித்த நாளாக மாற்றிவிட்டதை அறிந்து மகிழ்ச்சிக் கடலில் மிதந்தன. எனவே நாம் 2 திதிகளையும் ஒதுக்க வேண்டியதில்லை. அஷ்டமி திதியில் முக்கியமான காரியத்தை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் அன்றைய தினம் கண்ணபிரானை வணங்கிய பிறகு காரியத்தை தொடங்கலாம்.

அதே போல நவமி திதியில் ஒரு காரியத்தை செய்தே தீரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் வந்தால் ராமபிரான், சீதாதேவி, அனுமன் ஆகியோரை வழிபட்டுவிட்டு காரியத்தைச் செய்யலாம். திருமணம் மற்றும் கிரகப்பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு அஷ்டமி, நவமி நாட்களைத் தேர்ந்தெடுக்காவிட்டாலும் நடைமுறையில் செய்யும் மற்ற காரியங்களுக்கு அந்த திதிக்குரிய தெய்வங்களை வழிபட்ட பிறகு காரியத்தை தொடங்கினால் விதி மாறி வெற்றி கிடைக்கும் என்பதை அனுபவத்தில் நீங்கள் உணரலாம்.

Related Posts

Leave a Comment