இலவச அரிசி வழங்கும் திட்டம் கொழும்பில் ஆரம்பம் ..

by Lifestyle Editor

29 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று (26) கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பமானது.

திம்பிரிகசாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெமட்டகொட, நாரஹேன்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரை :

இதன்படி, தெமட்டகொட, மிஹிதுசென்புர சனசமூக மண்டபத்தில் 995 பயனாளிகளுக்கும், நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தை சனசமூக மண்டபத்தில் 448 பயனாளிகளுக்கும், வெள்ளவத்தை ரஞ்சன் விஜேரத்னபுர சனசமூக மண்டபத்தில் 169 பயனாளிகளுக்கும் அரிசிப் பொதிகள் வழங்கப்பட்டன.

அரசாங்கத்தின் 2022/2023 பெரும் போக அரிசி கொள்வனவு மற்றும் அரிசி கையிருப்பு அகற்றல் திட்டத்தின் கீழ், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த இலவச அரிசி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு :

ஒரு குடும்பத்துக்கு மாதம் 10 கிலோ அரிசி என்ற அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

இந்த அரிசி மானியம், 20 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் அதனை 29 இலட்சம் குடும்பங்களாக அதிகரிக்க அதிபரின் பணிப்புரைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, காலி, மாத்தறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Related Posts

Leave a Comment