திருமந்திரம் – பாடல் 1629 : ஆறாம் தந்திரம் – 5

by Lifestyle Editor

தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)

பின்னெய்த வைத்ததோ ரின்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதலவ னெம்மிறை
தன்னெய்து காலத்துத் தானே வெளிப்படு
மன்னெய்த வைத்த மனமது தானே.

விளக்கம்:

தவ நிலையை அடைந்த பிறகு அதில் மேன்மை நிலையை அடைய வைத்தது ஒரு பேரின்பத்தைக் கொண்ட பிறவியாகும். இந்த பிறவியை எடுப்பதற்கு முன்பு இருந்தே ஒவ்வொரு பிறவியிலும் இந்த நிலையை அடைவதற்கான வழி முறைகளை வைத்து அருளியது ஆதி முதல்வனாகிய எமது இறைவனாகும். தாம் இறைவனாகவே இருக்கின்றோம் என்பதை எமது ஆன்மா உணருகின்ற காலத்தில் அவன் தானாகவே உள்ளிருந்து வெளிப்பட்டு அருள்வான். அவ்வாறு இறைவன் வெளிப்படும் நிலையை அடைய வைத்தது தவ நிலையில் உறுதியாக இருக்கின்ற மனமாகும்.

கருத்து:

தவ நிலையில் மேன்மை அடைந்து இறைவனை உணருகின்ற நிலையானது ஒரே பிறவியில் கிடைத்து விடுவதில்லை. அதற்கு முன்பே ஒவ்வொரு பிறவிகளில் இறைவனின் அருளால் கிடைத்து செய்த பல சாதகங்களின் பலனால் சிறிது சிறிதாக இந்த நிலை கிடைக்கின்றது.

Related Posts

Leave a Comment