ரூ.400-ஆக இருந்த சிலிண்டர் ரூ.1,200; மானியம் தராமல் ஏமாற்றும் மத்திய அரசு- செந்தில் பாலாஜி

by Lifestyle Editor

மத்திய அரசு பொறுப்பேற்ற பிறகு 400 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலையை தற்போது 1200 ரூபாயாக உயர்ந்து விட்டது. மானியம் தருவதாக கூறி தற்போது அதையும் தராமல் ஏமாற்றுகிறார்கள் என அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுக முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “பெரியார், அண்ணா, கலைஞர் காட்டிய வழியில் முதல்வர் திட்டங்களை வழங்கி வருகிறார். பேராசிரியர் வழியில் ஆட்சி நடத்துகிறார். கொரோனா காலத்தில் வீடுகளில் பொதுமக்கள் முடங்கிக் கிடந்த போது அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் 1000 ரூபாய் தான் கொடுத்தார்கள். 5000 ரூபாயாக உயர்த்தி தர ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அவர்கள் கொடுக்க மறுத்த 4000 ரூபாயை முதல்வரான உடனே மக்களுக்கு வழங்கியவர் நமது முதல்வர். மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தை அறிவித்து, முதல்வரான பிறகு 2- வது திட்டமாக கையெழுத்திட்டு அமல்படுத்தினார்.

தமிழகத்தில் சிறு மழை பெய்தாலும், சென்னை உட்பட எங்கும் தண்ணீர் தேங்காத நிலையை ஏற்படுத்தியவர் நம் முதல்வர். 1,50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ஒன்றரை ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. கரூர் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, மாநகராட்சியாக தரம் உயர்த்தினார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும். நமக்கு நிறைய வேலை இருக்கு, நாம் மக்கள் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். வார்டு வாரியாக கரூரில் அலுவலகம் திறக்கப்படவுள்ளது. முதல்கட்டமாக வெங்கமேடு பகுதியில் திறக்கப்படும். மத்திய அரசு பொறுப்பேற்று 400 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலையை தற்போது 1200 ரூபாயாக ஆக்கிவிட்டது. மானியம் தருவதாக கூறினார்கள். ஆனால் தர மறுக்கிறார்கள். மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக பொங்கலுக்கு, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கரும்பும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். யார் கோரிக்கை வைத்தாலும், அந்த கோரிக்கையை ஏற்று திட்டங்களை செயல்படுத்துகிறார் முதல்வர். அவரது திட்டங்களை தமிழகம் முழுவதும் எடுத்துச் சென்று செயல்படுத்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார். கரூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

Related Posts

Leave a Comment