திருமந்திரம் – பாடல் #1603: ஆறாம் தந்திரம் – 2

by Lifestyle Editor

திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

அடிசார லாமண்ணல் பாத மிரண்டு
முடிசார வைத்தனர் முன்னே முனிவர்
படிசார்ந்த வின்பப் பழவடி வெள்ளங்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.

விளக்கம்:

இறைவனின் பாதங்கள் இரண்டையும் தமது தலையின் மேல் சேர்ந்து இருக்கும்படி வைத்து இறைவனின் திருவடிகளையே சார்ந்து இருக்கின்றார்கள் ஆதிகாலத்தில் முற்றும் துறந்த முனிவர்கள். பழம் பெரும் இறைவனின் அந்த திருவடிகளில் இருந்து அவர்கள் வெள்ளம் போல் பெற்ற அருளை உலக உயிர்களின் பக்குவத்துக்கு ஏற்றபடி படிப் படியாக அவர்களின் அனுபவிக்கும் படி படி கொடுக்கின்றார்கள் அவர்கள். இறைவனின் திருவடிகளை தங்களின் தலையில் குடி வைத்து அதையே சார்ந்து இருக்கின்ற வழிமுறையில் ஒன்றாக கூடி நிற்கின்ற அனைத்து முனிவர்களின் கொள்கையும் இதுவே ஆகும்.

கருத்து:

வெள்ளம் போன்ற இறைவனின் அருளை அப்படியே வழங்கினால் தாங்கிக் கொள்ள முடியாத உயிர்களுக்கு அவர்கள் அனுபவிக்க வேண்டிய ஆசைகளுக்கு ஏற்றபடி படிப்படியாக அனுபவிக்கும் படி மாற்றிக் கொடுத்து இறைவனின் திருவடிகளையே சார்ந்து இருக்கின்றார்கள் முற்றும் துறந்த முனிவர்கள். திருவடி பேற்றை அடைந்த இவர்களின் தன்மையை இந்தப் பாடலில் திருமூலர் அருளுகின்றார்.

Related Posts

Leave a Comment