ஆதார் இணைக்காவிடில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுமா ?

by Lifestyle Editor

ஆதாரை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

போலி வாக்காளர்களை அடையாளம் காணும் நோக்கிலும், கள்ள ஓட்டுக்கள் பதிவாவதை தடுக்கவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு தேர்தல் சட்டத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி முதல் இதற்கான சிறப்பு திட்டம் ஒன்றையும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் தொடர்பாக உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார். இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலளித்தார். அப்போது, “வாக்காளர்களின் அடையாளத்தை நிறுவும் நோக்கில், ஏற்கனவே இருக்கும் வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை விருப்பத்தின் அடிப்படையில் பெற்று பதிவு செய்ய வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) சட்டம்-2021 அனுமதி அளித்து உள்ளது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது விருப்பத்தின் பேரிலானது. மேலும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட படிவம் 6பி-ல் ஆதார் அங்கீகாரத்திற்காக வாக்காளர்களிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டது.

எனினும் ஆதார் விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்புதலை திரும்ப பெறுவதற்கு எந்த வசதியும் இல்லை. அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது முற்றிலும் விருப்பத்தின் பேரிலானது. எனவே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது.” என்று தெரிவித்தார். முன்னதாக மற்றொரு கேள்விக்கு பதிலளித்த கிரண் ரிஜிஜூ, ‘நாடு முழுவதும் உள்ள 95 கோடி வாக்காளர்களில் 54 கோடிக்கு அதிகமானோர் தங்களது ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

Related Posts

Leave a Comment