ரஷ்யா – உக்ரைனில் அமைதி திரும்ப இந்திய அரசு எடுத்த முயற்சிகள் என்ன? – வைகோ கேள்வி …

by Lifestyle Editor

ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு தீர்வு காண்பதற்கு இந்திய அரசின் சார்பில் ஏதேனும் இராஜதந்திர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதா? போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு ஏதேனும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதா? என்று 08.12.2022 அன்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் வைகோ எம்.பி. கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் அளித்த பதில் வருமாறு:-

(அ) ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு இந்திய அரசின் சார்பில் ஏதேனும் இராஜதந்திர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதா? (ஆ) அப்படியானால், அதன் விவரங்கள்; (இ) மோதலில் அணு அல்லது கதிரியக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைத் தணிக்க எடுக்கப்பட்ட அவசர நடவடிக்கைக என்ன?
(ஈ) காயமடைந்த உக்ரைன் மக்களுக்கு உதவி வழங்கப்பட்டதா?

இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் பதில்:

(அ) முதல் (ஈ) வரை உள்ள கேள்விகளுக்கான பதில்: உக்ரைன் மோதலின் தொடக்கத்தில் இருந்தே இருதரப்பும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும்; பேச்சவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் எனவும், அமைதி வழிக்குத் திரும்ப வேண்டும் எனவும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து இராஜதந்திர முயற்சிகளுக்கும் தனது ஆதரவையும் தெரிவித்துள்ளது.

போரை உடனடியாக நிறுத்திவிட்டு, அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் இந்தியப் பிரதமர் பலமுறை பேசியுள்ளார்.இந்திய வெளிவிவகார அமைச்சர் ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் தொடர்பில் உள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் உக்ரைன் பிரதமரையும் அவர் சந்தித்தார். அக்டோபர் 26, 2022 அன்று ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவுடன் தொலைபேசியில் உரையாடினார், மேலும் அணுசக்தி மற்றும் கதிரியக்க ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது என்றும், ஆயுதங்கள் மனிதகுலத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் சுட்டிக்காட்டினார்.

(ஈ) இந்தியா, உக்ரைனுக்கு மனிதாபிமான உதவியாக சுமார் 100 டன் பொருட்களை வழங்கி உள்ளது. உக்ரைன் அரசின் வேண்டுகோளின்படி கல்வி நிறுவனங்களை புனரமைக்கவும் இந்தியா நிதி உதவி அளித்துள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.

Related Posts

Leave a Comment