இன்று மதியத்திற்குள் மின்விநியோகம் சீராகும் – அமைச்சர் செந்தில் பாலாஜி ..

by Lifestyle Editor

மாண்டஸ் புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் இன்று மதியத்திற்குள் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மாண்டஸ் புயல் சென்னை மற்றும் வட மாவட்டங்களை முற்றிலுமாக புரட்டிப்போட்டது. இதனால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் இன்று மதியத்திற்குள் மீண்டும் மின்விநியோகம் சீராகும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது : “மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. புயலால் சேதம் அடைந்த மின்கம்பங்களை ஆய்வு செய்து அவற்றை சரிசெய்து அதன்பின் மின்விநியோகம் வழங்கப்படும்.இன்று மதியத்திற்குள் 100 சதவீதம் முழுமையாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் பணியாளர்கள் மற்றும் சென்னையில் மட்டும் 1,100 மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment