தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

by Column Editor

ஈவெரா என்ற பெயரை தமிழகத்தில் அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும் பாடுபட்ட மாபெரும் தலைவர் ஈவெ ராமசாமி. இவருடைய சுயமரியாதை கொள்கைகள் ,பகுத்தறிவு தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும் ,தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. ஈவெ ராமசாமி, ஈவெரா, தந்தை பெரியார் ,வைக்கம் வீரர் என பல பட்டங்களால் அழைக்கப்பெறும் இவர் பெண் விடுதலைக்காக போராடியவர்.

வசதியான முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை , தீண்டாமை , மூடநம்பிக்கை உள்ளிட்டவற்றுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர் பெரியார். தற்போதைய நவீன சிந்தனைகளை அன்றே தீர்க்கதரிசி போல மக்களிடையே எடுத்துரைத்தவர் பெரியார். சமுதாயத்தில் சாதி முறையையும், இழி நிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்த பெரியார், தனது 94 ஆம் வயதில் 1973ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 24 ஆம் தேதி இயற்கை எய்தினார். பெரியார் மறைந்து கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் ஆனபிறகும் அவரின் கொள்கைகளும் ,அவரின் கோட்பாடுகளும், அவரின் முழக்கங்களும் இன்றளவும் தமிழகத்தில் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் தந்தை பெரியாரின் 48வது நினைவு தினமான இன்று, அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், செந்தில் பாலாஜி , எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related Posts

Leave a Comment