கார்த்திகை தீபம் 2022 எப்போது ?

by Lifestyle Editor

தீபத்திருநாளில் வாசலில் வைக்கும் 2 தீபம் கட்டாயம் புதிதாக இருக்க வேண்டும்.

உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 6ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி, பொங்கல் பண்டிகை போன்று இந்து மக்கள் கொண்டாடும் திருநாள் தான் தீபத்திருநாள். இந்த நாளில் மக்கள் அனைவரும் வீடு எங்கும் விளக்கு ஏற்றி சிவனை வழிபடுவது வழக்கம்.

இந்த தீபத்திருநாளில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதுதான் திருவண்ணாமலை தீபம். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் இந்த தீபம் ஏற்றப்படும். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகுதான் பொதுமக்கள் அவர்களின் வீடுகளில் ஏற்ற வேண்டும்.

கார்த்திகை தீபம் 2022 எப்போது?

தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திருநாளில் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தமிழ் மாதம் கார்த்திகை 20ஆம் தேதியிலும், ஆங்கிலம் மாதத்தில் டிசம்பர் 6ஆம் தேதியும் கொண்டாடப்படவுள்ளது. இந்த திருவிழா வரும் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6ஆம் தேதி அன்று காலை 4 மணியளவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த தீபம் தொடர்ந்து 7 நாட்கள் எரிந்து கொண்டிருக்கும்.

பொதுமக்கள் வீட்டில் என்ன செய்ய வேண்டும்:

வாசலின் இரு முனையில் வைக்கப்படும் இரு விளக்குகள் மட்டும் புதிதாக இருப்பதே கட்டாயம், மீதம் உள்ள இடங்களில் பழைய விளக்குகள் உபயோகப்படுத்தலாம். ஆனால் விளக்குகளை முதல் நாளே சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும். தீபத்திருநாள் செவ்வாய்க்கிழமை வருவதால் அன்று விளக்குகளை கழுவுவது சரியானது அல்ல. அதனால் முதல் நாள் அல்லது ஞாயிற்றுக்கிழமையே விளக்குகளை கழுவி வைத்து கொள்ளலாம்.

தீபத்திருநாள் அன்று சுத்தமான விளக்குகளில் புதிதாக எண்ணெய் ஊற்றியே விளக்கு ஏற்ற வேண்டும். ஏற்கனவே தினசரி ஏற்றி வந்த விளக்கில் இருந்த எண்ணெயில் ஏற்றுதல் தவறு. கண்டிப்பாக விளக்கு எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும்:

கார்த்திகை தீபத்திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகுமாம். மேற்கு நோக்கி தீபம் ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்கு நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலுமாம். தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றுவது மிக மிக தவறாகும்.

எத்தனை முகம் தீபம் ஏற்ற வேண்டும்:

ஒரு முகம் தீபம் ஏற்றினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும், இரு முகம் ஏற்றினால் குடும்பங்களில் நன்மை உண்டாகும், 3 முகம் ஏற்றினால் குழந்தை பேறு உண்டாகும், 4 முகம் ஏற்றினால் செல்வம் பெருகும், 5 முகம் ஏற்றினால் சகல நன்மையும் உண்டாகும்.

எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்:

குறைந்தபட்சம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும் என கூறப்படுகிறது. இந்த 27 எண், 27 நட்சத்திரங்களை குறிக்கிறது. 27 வைக்கமுடியாதவர்கள் குறைந்தது 9 விளக்குகள் கட்டாயம் ஏற்ற வேண்டும்.

Related Posts

Leave a Comment