பிப்ரவரி 1 முதல் என்னென்ன மாற்றம்? முதல்வர் ஆலோசனை

by Column Editor

தமிழ்நாட்டில் அடுத்தகட்ட ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் விதிக்கப்படும் என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா மூன்றாவது அலை தமிழகத்தில் சுழன்றடித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. முதல் இரண்டு அலைகளை ஒப்பிடும் போது இம்முறை பாதிப்பு மிக வேகமாக பரவி வந்தாலும் பெரியளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் வீட்டுத் தனிமையிலேயே சிகிச்சை மேற்கொண்டு பெரும்பாலானோர் சில நாள்களில் குணமாகிவிடுகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், சிகிச்சை தேவைப்படுவோரும் இரண்டாவது அலையை ஒப்பிடுகையில் தற்போது மிகக் குறைவே. நாடு முழுவதும் இதுதான் நிலைமை.

இந்த சூழலில்தான் ஞாயிற்றுக் கிழமை மட்டும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. அதேபோல் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள் ஜனவரி 31ஆம் தேதி நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டன. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்களில் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. திருமணம், இறப்பு நிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 31ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். 30 ஆயிரத்தை தினசரி பாதிப்பு கடந்திருந்தாலும் நேற்று இறங்குமுகமாக உள்ளது. பாதிப்பு குறையத் தொடங்கினால் ஞாயிறு முழு ஊரடங்கு தேவை இருக்காது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை தொடங்கி நேரடி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பும் வலியுறுத்தி வருகிறது.

இந்த சூழலில் தமிழ்நாடு அரசு என்ன முடிவுகள் எடுக்கப்போகிறது என்பது குறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரித்தோம். ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டாலும் வழிபாட்டுத் தலங்களுக்கான தடை தொடரும் என்கிறார்கள். பள்ளிகள் திறக்க தொடர்ந்து ஒரு பக்கம் கோரிக்கைகள் வந்து கொண்டிருக்க 15 முதல் 18 வயதுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதால் 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக நேரடி வகுப்புகள் தொடங்கும் என கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment