அவசர ஆலோசனை! தமிழ்நாட்டில் தீவிர லாக்டவுனா? மீண்டும் மீட்டிங் போட்ட முதல்வர் ஸ்டாலின்.. ஏன்?

by Column Editor

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பிற்கான புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா கேஸ்கள் 2500ஐ தாண்டி உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 121 பேருக்கு ஓமிக்ரான் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமா என்பது குறித்து நேற்று முதல்வர் ஆலோசனை செய்தார்.

கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். சுகாதாரத்துறை வல்லுனர்கள், மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஆலோசனை:

இந்த கூட்டம் 2 மணி நேரம் நடைபெற்றது. கொரோனா கேஸ்கள் தமிழ்நாட்டில் உயர்வது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதேபோல் தமிழ்நாட்டில் என்ன மாதிரியான கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதன்படி கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர கண்காணிப்புகளை நடத்த வேண்டும், இரவு நேர லாக்டவுன் கொண்டு வர வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு லாக்டவுன்:

மேலும் வார இறுதி நாட்களில் கட்டுப்பாட்டு, தியேட்டர் , பார்கள் மூடுவது குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டன. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய விவரங்களை கேட்டதாக கூறப்படுகிறது. அதாவது ஓமிக்ரான் பரவும் வேகம், ஓமிக்ரான் கேஸ்களில் இரட்டிப்பு வேகம் உள்ளிட்ட விவரங்களை கேட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் அறிவியல் பூர்வமாக எப்படி லாக்டவுன் போட்டால் பயன் அளிக்கும். பொருளாதாரத்தை பாதிக்காத வகையில் லாக்டவுன் போட வேண்டும்.

தமிழ்நாடு கொரோனா:

இது குறித்த டேட்டா வேண்டும் என்று முதல்வர் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பிற்கான புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். மருத்துவத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் விவாதித்து வருகிறார் . கொரோனா தொடர்பான டேட்டாக்களை வைத்து இதில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு ஓமிக்ரான்:

மேலும் 10 மற்றும் 12 வகுப்புகளை தவிர மற்ற மாணவர்களுக்கு விடுப்பு குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டு உள்ளதாம். இரவு நேர ஊரடங்கு, விழாக்களில் கூட்டம் கூடுவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment