‘வலிமை’ சிமெண்ட்டை இன்று அறிமுகம் செய்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Column Editor

தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் ‘வலிமை’ சிமெண்ட்டை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார். தமிழகத்தில் சிமெண்ட் விலை உச்சத்தில் உள்ளது.

இதனால், கடந்த மார்ச் மாதத்தில் ஒரு மூட்டை சிமெண்ட் விலை 420 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் அடுத்த 3 மாதங்களிலேயே சிமெண்ட் விலை ஒரு மூட்டை 490 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதற்கு பிறகு ஒரு மூட்டை 20 முதல் 40 ரூபாய் வரை குறைக்கப்பட்டன. நிலக்கரி தட்டுப்பாடு,போக்குவரத்து செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மீண்டும் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டு 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் தமிழக அரசு சார்பில் சிமெண்ட் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் மலிவு விலை சிமெண்ட் ஆன வலிமை என்ற சிமெண்ட்டை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிமுகப்படுத்தி வைக்க இருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் வலிமை என்ற வணிகப் பெயருடன் குறைந்த விலையில் சிமெண்ட் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசின் டான்சென் நிறுவனம் சார்பில் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டுள்ள வலிமை சிமெண்ட்டை தமிழக முதலமைச்சர் இன்று சந்தைப்படுத்த உள்ளார். ‘வலியதோர் உலகம் செய்வோம்’ எனும் கருத்தை மையமாக கொண்டு, குறைந்த விலையிலும், நிறைந்த தரத்திலும் இந்த சிமெண்ட் உருவாகி இருக்கிறது. இதன் மூலம் வெளி சந்தையில் சிமெண்ட் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு சிமெண்ட் கழகம் சார்பாக விற்பனை செய்யப்படும் சிமெண்ட் விலை மூட்டை ஒன்றுக்கு 350 ரூபாயாக இருக்கிறது. இது தனியார் சிமெண்ட்டை விட 90 ரூபாய் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment