10ம் தேதி வரைதான் கடும்வெயில்.. அப்புறம் இருக்கு இதமான மழை!

by Lifestyle Editor

தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் மே 10க்கு பிறகு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ப்ரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

கோடைக்காலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் அக்கினி நட்சத்திரமும் தொடங்கியுள்ளதால் பல பகுதிகளிலும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வீசி வருகிறது. அதேசமயம் ஆறுதலாக சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகின்றது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக கொடைக்கானல், நீலகிரி பகுதிகளில் இதமான மழை பெய்துள்ளது.

இந்நிலையில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் மற்றும் மழைவாய்ப்பு குறித்து பேசியுள்ள தமிழ்நாடு வெதர்மேன் ”தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களான கரூர், ஈரோடு, நாமக்கல், வேலூர், திருத்தணி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அடுத்த 4 நாட்களுக்கு பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து பின் குறைய தொடங்கும்.

மே 10ம் தேதி வாக்கில் வெப்ப நிலை குறையத் தொடங்குவதுடன் தமிழத்தின் சில மாவட்டங்களில் கோடை மழைக்கும் வாய்ப்புள்ளது. அதன் பின்னர் வெப்பம் மேலும் தணியும். குமரி கடல்பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகும் வாய்ப்பு உள்ளதால் அதன் பின்னர் தமிழகத்தில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது” எனக் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment