நாட்டிலேயே நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில் சேவை..! பிரதமர் மோடி தொடங்கி வைப்பு..!

by Lifestyle Editor

மேற்குவங்க மாநிலம் கிழக்கு-மேற்கு வழித்தடத்தின் ஒரு பகுதியான ஹவுரா மைதானம் -எஸ்பிளனேட் மெட்ரோ பாதை இடையே ஹூக்ளி நதியின் நீர் மட்டத்தில் இருந்து 16 மீ ஆழத்தில் 520 மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். பள்ளி சிறுவர்கள் பலரும் இந்த மெட்ரோவில் பயணித்து மகிழ்ந்தனர். பிரதமர் மோடியும் பள்ளி மாணவர்கள் இடையே அமர்ந்து உரையாடியபடியே சென்றார்.

நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை நகர்ப்புற போக்குவரத்தை மாற்றி அமைப்பதற்கான முக்கிய திருப்புமுனையாக இருக்கும். நகரங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.

மெட்ரோ ரயில் சிறப்புகள்:

ஹூக்ளி ஆற்றின் கீழ் உருவாக்கியுள்ள சுரங்கப்பாதையின் உள் விட்டம் 5.55 மீட்டர், வெளிப்புற விட்டம் 6.1 மீட்டர். இந்த சுரங்கபாதை நீர் மட்டத்திலிருந்து 32 மீட்டர் கீழே ஓடும் ஒரு பொறியியல் அதிசயமாக கருதப்படுகிறது.

சுரங்கப்பாதை ஆற்றுப்படுகைக்கு கீழே 13 மீட்டரும் தரை மட்டத்திலிருந்து 33 மீட்டர் கீழே உள்ளது. மஹாகரன் மற்றும் ஹவுரா மெட்ரோ நிலையத்திற்கு இடையே ஹூக்ளி ஆற்றின் கீழே இந்த பாதை நீள்கிறது.

இந்தியாவின் ஒரு பெரிய ஆற்றின் கீழ் உருவான முதல் நீருக்கடியில் (Subaqueous tunnel) ரயில் அமைப்பாக இது அமைகிறது. இந்த சுரங்கப்பாதை ஹவுரா பாலத்துக்கு கீழே 350 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆற்றின் கீழே உள்ள சுரங்கங்களின் நீளம் 520 மீட்டர் ஆகும், ஆழமான இடத்தில் ஆற்றுப் படுகைக்கு கீழே 16 மீட்டர் ஆழம் உள்ளது.

Related Posts

Leave a Comment