திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாசுரங்கள் – 24

by Lifestyle Editor

திருப்பாவை பாசுரம் – 24

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்:

மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.

திருப்பள்ளியெழுச்சி பாடல் 4

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

பாடல் விளக்கம்:

ஒருபக்கம் வீணை மற்றும் யாழ் கொண்டு இனிய இசை செய்பவர்கள், ஒருபக்கம் ரிக் வேதமும் பல தோத்திரங்களும் சொல்பவர்கள், இன்னொரு பக்கம்… நிறைய மலர்களைக் கையில் பிடித்தவர்கள், அடுத்த பக்கத்தில்… அன்பின் மிகுதியால் அழுவார்களும் தொழுவார்களும் இருக்கிறார்கள். சிவபெருமானின் மீது கொண்ட அன்பின் மிகுதியால் தொழுவார்களும் விடாது அழுவார்களும் துவண்ட கைகளை உடையவர்களும் இன்னொரு பக்கத்தில் சிரத்தின் மீது கைகுவித்து நமஸ்கரிப்பவர்களும் இருக்கிறார்கள். திருப்பெருந்துறையில் இருக்கும் சிவபெருமானே! இவர்களோடு என்னையும் ஆண்டுகொண்டு, இனிய செய்வாயாக! எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக! என்று இறைவனை நினைத்து உருகி பாடியுள்ளார் மாணிக்கவாசகர்

Related Posts

Leave a Comment