திருப்பாவை பாசுரம் 16

by Lifestyle Editor

திருப்பாவை பாசுரம் 16 :

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழுப்பிப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

பொருள் :

எங்களுடைய ஒப்பற்ற தலைவனாக திகழக் கூடிய கோவிலுக்கு ஒப்பான நந்தகோபரின் வீட்டை காவல் புரிந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற வாயில் காப்பாளரே. இந்த கதவை எங்களுக்காக திறங்கள். வீட்டிற்கும், வீட்டின் முன் இருக்கும் தோரணம் போன்ற கொடியையும் காப்பவரே உமக்கு என்னுடைய வணக்கம். வாசல் கதவின் தாளை திறவுங்கள். ஆயர் குல சிறுமியர்களான எங்களுக்கு கிருஷ்ணன் நேற்று ஒரு வாக்கு கொடுத்துள்ளார். அது என்ன வாக்கென்றால், சிறிய அளவில் இருக்கக் கூடிய ஒலி எழுப்பும் வாத்தியமான அரைபறையினை தருமாறு கூறி இருந்தார்.

அதை வைத்து இந்த பாவை நோன்பிலே கிருஷ்ணருடைய புகழினை நாங்கள் பாட தயாராகி விட்டோம். அந்த இசைக் கருவியை பெறுவதற்காக தான் நாங்கள் இப்போது இங்கு வந்தோம். அதனால் தயவு செய்து எங்களுக்காக வந்து இந்த வாயிலின் கதவினை திறவுங்கள். இப்படி காலையில் வாசலில் வந்து நிற்கிறீர்களே நீங்கள் எல்லோரும் குளித்து சுத்தமாக இருக்கிறீர்களா, பூஜைக்கு தயாராகி விட்டாடீர்களா என நினைக்க வேண்டாம். நாங்கள் எப்போதோ தயாராகி விட்டோம்.

கிருஷ்ணர் எழுந்து வந்து சொன்னபடி அந்த வாத்தியத்தை தந்தால் நாங்கள் போய் எங்களுடைய வழிபாட்டினை துவக்குவோம். அதெல்லாம் முடியாது, நான் கதவை திறக்க மாட்டேன், கிருஷ்ணரை எழுப்ப மாட்டேன் என சொல்லி எங்களுடைய எதிர்பார்ப்பை நீங்கள் ஏமாற்றி விடாதீர்கள். எந்த வித எதிர்மறையான வார்த்தைகளையும் சொல்லாமல் தயவு செய்து கதவை திறக்க வேண்டும்.

விளக்கம் :

திருப்பாவை பாசுரத்தில் முதல் 15 பாடல்களில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் தோழியை எழுப்பி, நீராடி, கண்ணனின் பெருமையை பாட வாருங்கள் என அழைத்தார் ஆண்டாள். கண்ணனின் பெருமைகள், பெருமாளின் கையில் இருக்கக் கூடிய ஆயுதங்களின் பெருமைகள், கண்ணனின் வீரர் ஆகியவற்றை போற்றி பாடிய ஆண்டாள், தன்னுடைய 16வது பாடலில் கண்ண பெருமானின் மாளிகையில் இருக்கக் கூடிய வாயில் காப்பாளனை எழுப்பு, அதற்கு பிறகு கண்ணனை எழுப்பும் முயற்சியை துவங்கி உள்ளார். எதையும் அதற்கான முறைப்படி செய்ய வேண்டும் என்ற பண்பையும், பக்தியும் கற்றுக் கொடுக்கிறார் ஆண்டாள் நாச்சியார்.

Related Posts

Leave a Comment