திருப்பாவை பாசுரம் 11

by Lifestyle Editor

திருப்பாவை பாசுரம் 11 :

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

பொருள் :

கன்றுக்குட்டியுடன் இருக்கும் பசு மாட்டில் நன்கு பால் கறந்து, ஆயர் குல பணிகள் அனைத்தும் தெரிந்தவனும், எப்படிப்பட்ட பகையாக இருந்தாலும் அதை வென்று முறியடிக்கு வல்லமை பெற்றவன் நம்முடைய கண்ணன். நீயோ எந்த ஒரு குற்றமும் செய்யாத மிகப் பெரிய தலைவனாக விளங்குபவளின் மகள்.கொடி போன்ற மெலிந்த தேகத்தை உடைய பெண்ணே, புற்றில் இருக்கும் பாம்பை போல் மென்மையானது உன்னுடைய தேகம். மயில் போன்ற அழகை உடையவள் நீ. நீ இப்படி தூங்குவது தவறு இல்லையா? சுற்றத்தில் இருக்கும் தோழிகள் அனைவரும் வந்து உன்னை எழுப்புவதற்காக உன்னுடைய வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கிறோம்.

மழையை பொழிய காத்திருக்கும் கரும்மேகத்தை போல் நமக்கு கருணை மழை பொழிவதற்காக காத்திருக்கும் கறுமையான தேகத்தை உடைய கண்ணனை பாடிக் கொண்டிருக்கிறோம். அமைதியாக இப்படி பேசாமல் இருக்காதே. வீட்டின் செல்வ செழிப்பையும், பெருமையையும் போற்றி காக்கும் பெண் அல்லவோ நீ. இன்னும் இப்படி தூங்கிக் கொண்டிருப்பது சரியல்ல. எங்களுடன் வந்து திருமாலை போற்றி பாடி பக்தி செய்.

விளக்கம் :

ஆண்டாள் தனது 11 வது பாடலில் கண்ணனின் தர்மநெறியையும், ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் எடுத்து கூறுகிறார். இந்த பாடலின் துவக்கத்திலேயே கன்றுக் குட்டியுடன் இருக்கும் பசுவில் பால் கறக்க தெரிந்தவன் என கண்ணனை சொல்கிறாள். பசு பால் சுரப்பது கன்றுக்குட்டிக்காக தான். அந்த கன்று குட்டி குடித்தது போக மீதமுள்ள பாலை தான் நாம் கறந்து பயன்படுத்த வேண்டும். கன்றுக் குட்டி இல்லாத பசுவிடம் பால் சுரக்காது. அதனிடம் வைக்கோல் கன்றுக்குட்டியை காட்டி பால் கறப்பது மிகப் பெரிய பாவம். அந்த பாவத்தை ஒரு போதும் கண்ணன் செய்ய மாட்டார். அவர் தர்மத்தின் வழி நடப்பவர் என்பதை குறிப்பிடவே கன்றுக்குட்டியுடன் இருக்கும் பசுவில் பால் கறப்பவர் என சொல்கிறார்.

அதே போல, ஒரு பெண் என்பவள் தன்னுடைய குடும்ப பெருமையையும், பெயரையும் காக்க வேண்டிய பொறுப்புடையவள். அவள் சோம்பலாக தூங்கிக் கொண்டிருப்பது தவறு. ஒரு பெண் முதலில் தன்னை சுறுசுறுப்பாக வைத்து தன்னுடைய நலனை பாதுகாக்க வேண்டும். அதற்கு பிறகு தன்னுடைய கடமைகளை சரியாக செய்து குடும்ப நலனையும் காக்க வேண்டும். அவள் சோம்பலாக இருந்தால் அனைத்தும் தவறாகி விடும் என்பதை அழகாக எடுத்துரைக்கிறார் ஆண்டாள்.

Related Posts

Leave a Comment