ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 10

by Lifestyle Editor

திருப்பாவை பாடல் 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

பொருள் :

முந்தைய பிறவியில் விரதம் இருந்து, இறைவனை வழிபட்டதன் பலனாக சொர்க்கம் போன்ற சுகமாக வாழும் வாழ்க்கையை பெற்றாய் பெண்ணே. இப்போது ஏன் இப்படி மாறி விட்டாய்? நீ வீட்டின் கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் சொல்வதை கொஞ்சம் கேள். மணம் வீசும் துளசியை தலையில் முடிந்த நாராயணனை நாம் போற்றி, நோன்பு இருந்தால் அதற்கான புண்ணிய பலனை அவன் உடனடியாக கொடுத்து விடுவான். பண்டைய காலத்தில் தூக்கத்திற்கு உதாரணமாக கும்பகர்ணனை கூறுவார்கள். அந்த கும்பகர்ணன் தனது தூக்கம் முழுவதையும் உனக்கே கொடுத்து விட்டானா? அருமையான அணிகலன்களை அணிந்த பெண்ணே, உன்னுடைய சோம்பலான தூக்கத்தை விடுத்து, பதற்றமின்றி வந்து வீட்டின் கதவை திற.

விளக்கம்:

இந்த பாடலின் துவக்கத்திலேயே விரதம் இருப்பதை பற்றி ஆண்டாள் குறிப்பிடுகிறாள். நாம் பட்டினியாக விரதம் இருந்தால் இறைவன் எப்படி நமக்கு அருள் செய்வார் என பலர் யோசிப்பதுண்டு. விரதம் என்பது நம்முடைய உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் ஓய்வு கொடுக்கும் நாளாகும். விரதம் இருப்பதால் மனம் தெளிவடைந்து, தூய்மையாகிறது. இதனால் நம்முடைய செயல்களும் நல்லவையாக ஆகி விடுகிறது. மனமும், செயலும் சரியாக இருந்தால் ஒரு மனிதன் வாழ்க்கையில் தவறுகள் செய்யாமல் நல்லவழியில் நடப்பான். விரதத்தின் போது பட்டினியாக இருப்பதால் பசியின் அருமை என்னவென்று புரியும்.

இதனால் ஏழ்மையில் இருக்கும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணமும் வளரும். இவ்வாறு எண்ணம், செயல் அனைத்தும் நல்ல விஷயங்களே நிறையும் போது அவன் செய்யும் காரியங்களால் புண்ணிய பலன்கள் தானாக கிடைத்து விடும். அன்பும், கருணையும் இருக்கும் இடத்தில் தானாக இறைவனின் தன்மை நிறைந்து விடும். இதனால் இறைவனின் அருள் நமக்கு வாழ்க்கை முழுவதும் கிடைத்து விடும். பரம்பொருளுடன் உலக உயிர்கள் அனைத்தும் ஒன்றாக வேண்டும் என்பதை விரதம் இருப்பதன் அவசியத்தை கூறி இந்த பாடலில் ஆண்டாள் விளக்குகிறார்.

Related Posts

Leave a Comment