அயோத்தியில் ராமர் கோயில் திறப்பை ஒட்டி அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்!

by Lifestyle Editor

ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு அயோத்தியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. “ராம்லாலாவை பார்க்க ஏராளமானோர் வருகின்றனர். கோடிக்கணக்கான மக்கள் வருவதால் விற்பனை அதிகரித்து நல்ல லாபம் கிடைக்கிறது” என நகரின் ரம்பாத் பகுதியில் டீக்கடை வைத்திருக்கும் ஆஷிஷ் சொல்கிறார்.

அயோத்தி ராமர் கோவில் மாதிரிகள்

அயோத்தியில் ராமர் கோவில் போலவே சிறிய அளவில் உருவாக்கப்படும் மாதிரிகளுக்கு நாடு முழுவதும் தேவை அதிகமாகியுள்ளது. உலகின் பல பகுதிகளிலும்கூட இதற்குத் தேவை உள்ளது. ஆன்லைனிலும் அயோத்தி ராமர் கோயில் மாதிரிக்கு கிராக்கி உள்ளது. ராம்கோட் பகுதியில் மரத்தால் செய்யப்பட்ட ராமர் கோவில் மாடல்களை விற்பனை செய்யும் விஜய், அவற்றிற்கு கிராக்கி அதிகமாகியுள்ளதாகச் சொல்கிறார். சிறியது முதல் பெரியது வரை பல அளவுகளில் இந்த மாதிரிகள் விற்கப்படுகின்றன. 7-8 விதமான மாடல்கள் நாள் முழுவதும் விற்கப்படுகின்றன. அதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 8 மற்றும் 10 அங்குல அளவுகளில் விற்கப்படும் மாடல்களுக்கு அதிக தேவை உள்ளது என்று அவர் தெரிவிக்கிறார்.

பூஜைப் பொருள் வியாபாரம்

அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் மாலைகள், ராமர் பொம்மைகள், மதச் சின்னங்கள், அலங்காரப் பொருட்கள் விற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்பு சிருங்கார் ஹாட் உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே இவை அதிகம் விற்கப்பட்டன. இப்போது இந்தச் சிறு வியாபாரிகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. தினமும் 1000 முதல் 1200 ரூபாய் வரை பொருட்கள் விற்பனையாகிறது என்கிறார் சாலையோரம் மாலைகள் விற்கும் சீமா காஷ்யப். கோவில்கள் அருகே பூ, மாலை, பிரசாதம் விற்கும் கடைக்காரர்கள் வியாபாரத்தில் மும்முரமாக உள்ளனர்.

மண் பாண்டங்கள், பாட்டில் தண்ணீர்

“ராமர் கோவில் கட்டப்பட்டதன் மூலம் புதிய நிறுவனங்கள் மற்றும் கடைகள் அதிகரித்துள்ளன. மண் பானைகள், பாட்டில் தண்ணீர் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளது. இவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு அதிகமாகி உள்ளது. பேக்கரி கடைகள் பெருகியுள்ளன. வரும் காலங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்த்து, புதிய கடைகள் திறக்கப்படுகின்றன” என்று உள்ளூர்வாசியான வினோத் திரிபாதி கூறுகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இ-ரிக்‌ஷாக்களின் எண்ணிக்கை இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்கிறார் சிவக்குமார். இ-ரிக்‌ஷாக்களில் ஒரு நாளில் 1000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இந்த வாகனங்களை முன்பதிவு செய்வதும் அதிகரித்துள்ளது என்றும் அவர் சொல்கிறார்.

ஹோட்டல்கள் அதிகரிப்பு

அயோத்தியில் உணவு வியாபாரம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கிய காலத்திலிருந்தே ஏராளமானோர் வந்து செல்வதால், விற்பனை அதிகரித்துள்ளதாக இளநீர் வியாபாரம் செய்யும் ராம் பகதூர் தெரிவிக்கிறார். அயோத்தியில் ஹோட்டல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அயோத்தியில் 50 ஹோட்டல்கள் கட்ட அனுமதி கோரப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரி ஆர்.பி.யாதவ் தெரிவிக்கிறார்.

Related Posts

Leave a Comment