திருக்கார்த்திகை தீபத் திருவிழா… 3 ஆம் நாள் இரவு உற்சவம்..!

by Lifestyle Editor

அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் சிம்ம வாகனத்திலும், பராசக்தி அம்மன் அன்ன வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சிறிய வெள்ளி ரிஷப வாகனத்திலும் என பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் மற்றும் பராசக்தி அம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பல்வேறு விமானத்தில் மாட வீதியில் உலா வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 17 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த தீபத் திருவிழாவின் 3- ஆம் நாளான நேற்று இரவு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு அண்ணாமலையார் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து வண்ண வண்ண மலர்களால் மாலைகள் தொடுக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து தீப தூப ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ராஜகோபுரம் முன்புள்ள 16 கால் மண்டபத்தில் அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினார்.

இதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு கற்பூர தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், முருகர் வெள்ளி மயில் வாகனத்திலும், அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் சிம்ம வாகனத்திலும், பராசக்தி அம்மன் அன்ன வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சிறிய வெள்ளி ரிஷப வாகனத்திலும் என பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

Related Posts

Leave a Comment