கந்த சஷ்டி விரதம் இருப்பதினால் கிடைக்கும் பலன்கள் ..!

by Lifestyle Editor

தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட உகந்த நாட்களில், கந்தசஷ்டி விரதம் மிக முக்கியமான விரதமாகும். மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதிதான் ‘கந்தசஷ்டி’ விழாவாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி, சஷ்டி திதி வரையான 6 நாட்கள், கந்தசஷ்டி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கந்தசஷ்டி திருநாள், 18.11.2023 சனிக்கிழமை (கார்த்திகை மாதம் 2ஆம் தேதி) அன்று வருகிறது.

கந்த சஷ்டி திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீமையான சூரபத்மனை எதிர்த்து நன்மையான முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வானது 6 நாட்கள் விரதமுறையைக் கடைப்பிடிப்பது ஆகும்.

சஷ்டி விரதம் 2023 தேதிகள் நேரங்கள்:

சஷ்டி விரதம் நவம்பர் 13, 2023 முதல் நவம்பர் 19, 2023 வரை கொண்டாடப்படுகிறது.

1.நவம்பர் 13, 2023 (திங்கட்கிழமை) – நாள் 1 – கந்த சஷ்டி திருவிழா ஆரம்பம்

2. நவம்பர் 14, 2023 (செவ்வாய்) முதல் நவம்பர் 17, 2023 (வெள்ளிக்கிழமை) வரை- நாள் 2 முதல் 5ஆம் நாள் வரை

3, நவம்பர் 18, 2023 (சனிக்கிழமை) – நாள் 6 – சூரசம்ஹாரம்

4. நவம்பர் 19 (ஞாயிறு) – நாள் 7 – திருகல்யாணம்

இந்த சஷ்டி விரதம் கந்த சஷ்டி விழா என்றும் அழைக்கப்படுகிறது. சஷ்டி நாளில் பக்தர்கள் கோயிலிலோ அல்லது வீட்டிலோ பூஜை செய்யலாம். சஷ்டி விழாவின் நேரங்கள் மாலை 06.00 மணி முதல் இருக்கும்.

சஷ்டி விரதத்தின் பலன்கள்:

1. தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை விடுத்து ஆற்றல், தன்வயமுடைமை, இயற்கை உணர்வு, பேரருள் ஆகிய நற்குணங்களைப் பெறும் நோக்கில் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

2. இந்த விரதம் இருப்பதன் மூலம் நம்மிடம் இருக்கும் குறைகள் நீங்கி நன்மை சேரவும், நீங்கள் அடைய நினைக்கும் அத்தனை செல்வமும் வந்து சேர உதவும். சூரபதுமனை சூரசம்ஹாரம் செய்து, முருகப்பெருமான் வெற்றிவாகை சூடிய தினமாக கந்த சஷ்டி விரத நாள் பார்க்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் முருகனை வழிபட்டால், நாமும் வாழ்வில் அடைய முடியாத வெற்றிகளைக்கூட சுலபமாக பெறலாம் என்பது ஐதீகம்.

3. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. அதாவது சஷ்டி திதியில் விரதமிருந்து முருகப்பெருமானை நினைத்து வழிபட்டால் பிள்ளைப் பேறு கிடைக்காதவர்களுக்கு ‘அகப்பை’ எனப்படும் ‘கருப்பை’யில் பிள்ளைப் பேறு உண்டாகும். குழந்தைச் செல்வத்தை வழங்கும் மகத்தான விரதங்களில், அதிமுக்கியத்துவம் வாய்ந்தது இந்த ‘கந்தசஷ்டிவிரதம்’ ஆகும். கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்வதன் மூலம் பதினாறு வகையான செல்வங்களையும் பெற முடியும்.

Related Posts

Leave a Comment