பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்ட விழா கோலாகலம்..

by Lifestyle Editor

தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தமிழகத்தில் உள்ள பழமையான மற்றும் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று நெல்லை டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயிலாகும். இந்தக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் ஆனித் தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் நடப்பாண்டுக்கான ஆனித் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பின்னர் நாள்தோறும் காலை, மாலையில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் கோயில் தேர், நான்கு ரத வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி, அசைந்து வலம் வருவது காண்போரின் மனதை குளிரச்செய்கிறது. முன்னதாக சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரும் தேரோட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகரகாவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில், சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts

Leave a Comment