அதிர்ச்சி தகவல்! ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்கள் 10 பேரை காணவில்லை

by Lifestyle Editor

ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என தமிழக குழு தகவல் தெரிவித்துள்ளது.

ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பகனாகா பஜார் அருகே நேற்று முன் தினம் இரவு பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகளவில் சேதமடைந்த நிலையில், அதில் பயணித்த பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுவரை ஒடிசா ரயில் விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் தற்போது வரை 10 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தமிழக குழு தகவல் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான கோரமண்டல் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்பு கொள்ள இயலவில்லை என்று தமிழக குழுவில் உள்ள போக்குவரத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார். அவர்களின் நிலை என்ன என்பதை அறிய ஒடிசா அதிகாரிகளுடன் இணைந்து தமிழ்நாடு குழு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Comment