திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 தரிசன டிக்கெட் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு ..

by Lifestyle Editor

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள், 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள், தங்கும் அறைகள் ஆகியவற்றை தேவஸ்தான நிர்வாகம் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு நாளில் ஆன்லைனில் வெளியிட்டு வருகிறது. இதனால் எந்த நாளில், எப்போது டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்ற குழப்பம் பக்தர்களிடையே ஏற்படுகிறது.

இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இனிமேல் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களில் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது பற்றி தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு மாதமும் 18ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அபிஷேகம் ஆகிய டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு அவற்றை முன் பதிவு செய்யும் பக்தர்களுக்கு டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

குழுக்கள் மூலம் டிக்கெட்டைகளை பெற்ற பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை உரிய கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம்.

ஒவ்வொரு மாதமும் 21ஆம் தேதி கல்யாண உற்சவம், டோலோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் 23ஆம் தேதி மூத்த குடிமக்கள், ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான டிக்கெட்டுகளும், 23ஆம் தேதி அன்று ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு உரிய ஸ்ரீவாணி விஐபி தரிசன டிக்கெட்டுகள், அங்க பிரதட்சன டோக்கன்கள் ஆகியவையும், 24ஆம் தேதி அன்று 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளும், 25ஆம் தேதி அன்று தங்குவதற்கான அறைகளும் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment