கள்ளக்குறிச்சி அருகே கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மோ. வன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் விஜயா என்பவருக்கும் தியாகதுருகம் அருகே உள்ள பல்லகச்சேரி கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் முருகன் என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருமணம் ஆன சில மாதங்களில் கணவன் முருகனுக்கும் மனைவி விஜயாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்த விஜயா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு வந்துள்ள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வரும் விஜயாவை சேர்ந்து வாழ பலமுறை முருகன் அழைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முருகனுடன் வாழ மறுத்து வந்த விஜயாவை மோ.வன்னஞ்சூர் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழாவிற்கு சென்ற போது விஜயாவை பார்த்து முருகன் தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
அப்போது வர மறுத்த விஜயாவை தனது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக கை கால் மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் குத்தியுள்ளார். இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த விஜயாவை அக்கம் பக்கத்தினர் மீட்க முயன்ற போது பொதுமக்கள் கத்தி கூச்சலிடவே தகவல் அறிந்து சம்பவ இடத்தில் பாதுகாப்பில் இருந்த கள்ளக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்தியசீலன் முருகனை பிடிக்க முயன்ற போது கையில் வைத்திருந்த மற்றொரு கத்தியால் உதவி ஆய்வாளரின் காலில் குத்தியுள்ளார்.
இந்த நிலையில் உடன் சென்ற மற்ற காவலர்கள் முருகனை பிடித்து கைது செய்தனர். மேலும் படுகாயம் அடைந்த விஜயா மற்றும் உதவி ஆய்வாளர் சத்தியசீலன் ஆகிய இருவரை ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் விஜயா உயிரிழந்த நிலையில், உதவி ஆய்வாளர் சத்தியசீலனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் முருகனை கைது செய்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.