ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு.. பொதுத்தேர்வு தேதிகளும் வெளியீடு – அமைச்சர் அன்பில் மகேஷ்

by Lifestyle Editor

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2022 – 23 ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் இன்றுடன் முடிவடைகிறது. ஏற்கனவே 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று கடைசி ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறுகிறது. நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்நிலையில் கோடை விடுமுறைக்குப் பின்னர் 2023 – 24ம் ஆண்டுக்கான வகுப்புகள் ஜூன் 1ம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் திறந்தவுடன் மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் 515 பள்ளிகள் விதிமுறைகளை பின்பற்றாமலேயே தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என்றும் அமைச்சர் அறிவித்தார். அடுத்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி 11ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கும் என்றும், மார்ச் 18 ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார் .

Related Posts

Leave a Comment