‘பொன்னியின் செல்வன் 2’ இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டது …

by Lifestyle Editor

மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 அதற்குள் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து இருந்தது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீஸாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த நிலையில், தற்போது மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசாகி உள்ளது. இப்படம் இன்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி உள்ளது.

கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் இன்று உலகமெங்கும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான திரைகளில் ரிலீசாகி உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் காட்சி தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு தான் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனைக் காண ரசிகர்கள் குவிந்ததால் திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூண்டது.

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரிலீசான சில மணிநேரங்களிலேயே அப்படத்தை திருட்டுத்தனமாக பைரசி தளங்களில் வெளியிட்டு உள்ளனர். மேலும் அந்த படத்தின் லிங்குகளையும் டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பரவவிட்டு வருகின்றனர். இதனால் பொன்னியின் செல்வன் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. பைரசி தளங்களின் இந்த செயலால் பொன்னியின் செல்வன் 2 படத்தின் வசூலும் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் பிரீமியர் ஷோ வெளிநாடுகளில் இன்று அதிகாலையே திரையிடப்பட்டது. அங்கிருந்து தான் யாரோ படத்தை ரெக்கார்டு செய்து அதனை அப்படியே பைரசி தளங்களில் பதிவேற்றி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பைரசி தளங்களில் வெளியாவதை தடுக்க படக்குழு தரப்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு மட்டுமின்றி, இவ்வாறு வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும் பைரசி தளங்கள் இந்த செயலை செய்துள்ளது திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Posts

Leave a Comment