ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு – இன்று பிற்கலில் விசாரனை ..

by Lifestyle Editor

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு, பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த சுழலில், அதிமுக பொதுச்செயலாளார் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, மார்ச் 28-ம் தேதி அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனக்கூறி, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அமர்வில் ஏப்ரல் 03ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய சூழ்நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், இடைக்கால உத்தரவு பிறபித்தால் சிக்கலை ஏற்படுத்தும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். இதனிடையே மேல்முறையீட்டு மனுவை ஏப்ரல் 20-ம் தேதி மதியம் 2.15 மணிக்கு விசாரிப்பதாக இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது சபிக் ஆகியோர் முன்பு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது. இன்றும், நாளையும் பிற்பகலில் இந்த வழக்கு சிறப்பு வழக்காக விசாரிக்கப்படுகிறது. நாளை மாலை இந்த வழக்குகளின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment