பழனி முருகன் கோயிலில் ஆகம விதிப்படியே மண்டல பூஜை – நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல்..

by Lifestyle Editor

பழனி முருகன் கோவிலில் 48 நாட்கள் மண்டல பூஜை மற்றும் தைப்பூசத் திருவிழாவால் எந்த தடையும் இல்லாமல் ஆகம விதிப்படியே நடைபெறுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ஆர்.ரமேஷ் என்பவர் அவசர வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த தாக்கல் செய்த மனுவில், கும்பாபிஷேகம் நடைபெற்ற பழனி முருகன் கோவிலில் 48 நாட்கள் மண்டல பூஜை பெயரளவிலேயே நடைபெறுவதாகவும், ஆகம விதிப்படி நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தைப்பூச திருவிழா நடைபெறுவதால் மண்டல பூஜை தடைபட வாய்ப்புள்ளதாகவும், ஆகம விதிப்படி மண்டல பூஜை நடைபெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோரது அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. அப்போது இந்து அறநிலையத் துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், தைப்பூசத் திருவிழாவால் மண்டல பூஜை எந்த வகையிலும் தடைபடாது என்று தெரிவித்தார். மேலும், 48 நாட்கள் மண்டல பூஜையில் 11 கலசங்கள் வைத்து பூஜையும், இறுதி நாளில் 1008 சங்கு பூஜைகள் நடைபெறும் என்றும் குறிப்பிட்ட வழகறிஞர் , ஆகம விதிப்படியே அனைத்தும் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார். அவரது வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Related Posts

Leave a Comment