மகரவிளக்கு பூஜை: பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் புறப்பட்டது!

by Lifestyle Editor

மகர ஜோதி அன்று (14-01-2023) பகல் 12 மணிக்கு மேல் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஜனவரி 14 மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் நேற்று பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. குருசுவாமி குளத்தினால் கங்காதரன் பிள்ளையின் தலைமையில் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டிருந்த திருவாபரணங்கள் தங்கள் தலையில் ஏந்தி சபரிமலைக்கு பாதயாத்திரையாக எடுத்துச் சென்றனர். பந்தளம் அரண்மனையின் பிரதிநிதியாக இம்முறை ராஜராஜ வர்மா ஊர்வலத்தை முன்னின்று ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

நேற்று அதிகாலை வலியகோயிக்கல் தர்மசாஸ்தா கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு. அங்கு காலை 11 மணி வரை பக்தர்கள் ஆபரணங்களை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டன. தொடர்ந்து மதியம் கோவிலில் சடங்கு சம்பிரதாயங்கள் நடத்தப்பட்டு ஒரு மணிக்கு குளத்தினால் கங்காதரன் பிள்ளை தலைமையிலான குழுவினர் திருவாபரண பெட்டிகள் தலையில் ஏந்தி சபரிமலை நோக்கி ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

பின்னர் பாரம்பரிய பாதை வழியாக குளநாடா, உள்ளன்னூர், ஆரன்முளா வழியாக அயிரூர் புதிகாவ் கோயிலை வந்தடைந்தது. இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஊர்வலம் லாஹா வனத்துறை விடுதியை அடைந்து அங்கு முகாமிடும். மூன்றாம் நாள் மகர ஜோதி அன்று கானக பாதை வழியாக ஊர்வலம் செல்கிறது.

பிளாப்பள்ளியில் இருந்து அட்டதோடு வழியாக வலியானவட்டம், செறியானவட்டம் வழியாக மாலையில் சபரிமலை சன்னிதானம் சென்றடையும். தொடர்ந்து திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவித்து தீபாராதனை நடைபெறும் போது பொன்னம்பல மேட்டில் மகரஜோதி ஒளிரும். மகர ஜோதியை தரிசிக்க தற்போதே பல்லாயிர கணக்கான பக்தர்கள் மலை உச்சியில் குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் பர்ணசாலா ( தற்காலிக குடில் ) அமைத்து தங்கி வருகின்றனர்.

மேலும் மகர ஜோதி நாளில் (14-01-2023) அன்று பகல் 12 மணிக்கு மேல் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மகர ஜோதி தரிசனம் முடிந்து 15 ஆம் தேதி காலை முதல் மறுபடியும் சன்னிதானம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment