திருமந்திரம் – பாடல் 1601 : ஆறாம் தந்திரம் – 2

by Lifestyle Editor

திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

முடிமன்ன ராய்மூ வுலகம தாள்வ
ரடிமன்ன ரின்பத் தளவில்லைக் கேட்கின்
முடிமன்ன ராய்நின்ற தேவர்க ளீசன்
குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே.

விளக்கம்:

கிரீடத்தை சூடிக்கொண்டு இருக்கின்ற மன்னர்களாக இருப்பவர்கள் தேவ லோகம், பூலோகம், பாதாள லோகம் ஆகிய மூன்று உலகங்களிலும் இருக்கின்ற பல நாடுகளை ஆட்சி செய்வார்கள். ஆனால், இறைவனது திருவடிகளை தமது நெஞ்சத்திற்குள் நிலைபெற்று வைத்து இருக்கின்றவர்கள் அடைகின்ற பேரின்பத்திற்கு அளவு என்பதே இல்லை கேட்டுக் கொள்ளுங்கள். ஆகவே மலங்கள் இருப்பதாலேயே கிரீடத்தை சூடிக்கொண்டு இருக்கின்ற மன்னர்களாக நிற்கின்ற தேவர்கள் கூட இறைவனின் திருவடிகளை தமது நெஞ்சத்திற்குள் குடி வைத்த மன்னர்களாக இருந்தால் எந்த விதமான மலங்களும் இல்லாமல் நிற்பார்கள்.

கருத்து:

தேவர்கள் கன்மம் மாயை அனைத்தும் நீங்கப்பெற்று நான் என்ற எண்ணம் நீங்கி ஞானம் அடைந்தாலும் இறைவனுடன் கலக்காமல் தனிப்பட்ட தனது பெயரினால் அழைக்கப்படுவதினால் அவர்களுக்கு ஆணவமலம் இருக்கின்றது. அவர்கள் இறைவனின் திருவடிகளை தமது நெஞ்சத்திற்குள் நிலைபெற்று இருக்கும் படி செய்து விட்டால் அந்த மலமும் நீங்கி எந்தவிதமான மலங்களும் இல்லாமல் இருப்பார்கள்.

Related Posts

Leave a Comment