3 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்

by Lifestyle Editor

3 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளி மாணவர்களுக்கான புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி வந்தடைகிறார். பின்னர் சாலை மார்க்கமாக காட்டூர் பாப்பாக்குறிச்சி ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் அவர், ‘ஸ்டெம் ஆன் வீல்ஸ்’ என்ற புதிய நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத்தில் பள்ளி மாணவர்களிடையே கற்றலை ஊக்குவிப்பதன் மூலம் கல்வி முறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தப்பாடங்கள் தன்னார்வலர்கள் மூலம் இருசக்கர வாகனங்களில் சென்று மாணவர்களின் இருப்பிடத்திலேயே கற்றுத் தருவதற்காக செல்லும் தன்னார்வலர்களை கொடியசைத்து வழி அனுப்பி வைக்கிறார். இதனையடுத்து கோத்தாரி சர்க்கரை ஆலையில் புதிய அலகினை தொடங்கி வைக்கிறார். பின்னர் எறையூரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு, பெரம்பலூர் விருந்தினர் மாளிகைக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை முதலமைச்சர் பார்வையிடவுள்ளார். பின்னர் மாலை அரியலூர் விருந்தினர் இல்லம் செல்லும் முதல்வர் , இரவு அங்கு தங்கி ஓய்வு எடுக்கிறார்.

அதன்பிறகு மறுநாள் 29-ந்தேதி (செவ்வாய்க்கழமை) காலை அரியலூர்-செந்துறை சாலையில் உள்ள கொல்லாபுரத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.31 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலான 54 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், ரூ.221 கோடியே 80 லட்சத்து 28 ஆயிரம் செலவில் முடிவுற்ற 23 திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். பல்வேறு அரசுத்துறைகள் மூலம் 9,621 பயனாளிகளுக்கு ரூ.26.2 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

அதன் பின்னர் அரியலூரில் இருந்து திருச்சி விமான நிலையம் சென்று மதியம் 12.30 மணிக்கு தனி விமானத்தில் மீண்டும் சென்னை புறப்பட்டு செல்கிறார். தமிழக முதல்வரின் வருகையை முன்னிட்டு திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முன்னேற்பாடு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனையொட்டி, திருச்சி திருவெறும்பூர் காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் ஆயத்த பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நேரில் ஆய்வு செய்தார்.

Related Posts

Leave a Comment