ராணுவ வீரரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகர்..

by Lifestyle Editor

ஓடும் ரயிலில் ராணுவ வீரரை டிக்கெட் பரிசோதகர் கீழே தள்ளியதில் ராணுவ வீரர் இரு கால்களையும் இழந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி ரயில் நிலையத்திற்கு 29 வயது ராணுவ வீரர் சோனு குமார் சிங் ராஜ்தானி ரயிலில் பயணம் செய்ய நேற்று வந்துள்ளார். ராணுவ வீரர் சோனு தற்போது டெல்லியில் பணி என்பதால், திப்ரூகர்-புது டெல்லி ராஜ்தானி ரயிலுக்காக பரேலி ஸ்டேஷனில் காத்திருந்தார். காலை 9.30 மணி அளவில் இந்த ரயில் பரேலி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. அப்போது பி6 பெட்டியில் ராணுவ வீரர் சோனு ஏறியுள்ளார். அந்த பெட்டியில் குபன் போரே என்ற டிக்கெட் பரிசோதகர் இருந்துள்ளார். அப்போது ராணுவ வீரருக்கும் டிக்கெட் பரிசோதகருக்கும் டிக்கெட் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ரயில் இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ரயில் ஸ்டேஷனை விட்டு புறப்பட தொடங்கியுள்ளது. அப்போது வாக்குவாதம் செய்த ஆத்திரத்துடன் டிக்கெட் பரிசோதகர் குபன், ராணுவ வீரரை ரயிலை விட்டு கீழே தள்ளியுள்ளார். இதில் சக்கரங்களுக்கு இடையே சிக்கியதில் ராணுவ வீரரின் ஒரு கால் துண்டானது. மற்றொரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ராணுவ வீரருக்கு இன்னும் நினைவு திரும்பாத நிலையில், அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் நடைபெற்ற உடனே டிக்கெட் பரிசோதகர் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில், அவர் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் சம்பவத்தின் முழு பின்னணியை தெரிந்து கொள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறை ஆய்வு செய்துள்ளது. மேலும், ராணுவ வீரருக்கு சுய நினைவு திரும்பியவுடன் அவரின் வாக்குமூலத்தை பெற காவல்துறை திட்டமிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment